"எங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் இடையே வெறுப்பை விதைக்காதீங்க".. அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது
பெய்ஜிங்: சீனாவுக்கும், அதன் பிராந்திய நாடுகளுக்கும் இடையே வெறுப்பை விதைக்கும் வேலையை அமெரிக்கா செய்யக் கூடாது என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவின் இந்திய பயணத்தையொட்டி இப்படி ஒரு எச்சரிக்கையை சீனா விடுத்துள்ளது.
இந்தியா வந்துள்ள பாம்பியோவும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும், இந்தியாவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இந்தியத் தரப்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமெரிக்க குழுவினர் இலங்கை, மாலத்தீவு நாடுகளுக்கும் செல்லவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின்போது இந்தியாவுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும்என்று வலியுறுத்திய பாம்பியோ, லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய வீரர்கள் சீனப்படையினரால் கொல்லப்பட்டது குறித்தும் குறிப்பிட்டுப் பேசினார்.
இலங்கை என் பங்காளி...நான் என்னவோ செய்வேன்.. அதை நீ ஏன் கேட்கிற மேன்? அமெரிக்காவிடம் சீனா வம்பு
இந்த நிலையில் சீனாவுக்கும், அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே வெறுப்பை விதைக்க அமெரிக்கா முயல்வதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், பாம்பியோ சீனாவுக்கு எதிரான கருத்துக்களைக் கூறியுள்ளது துரதிர்ஷ்டவசமானது. கண்டனத்துக்குரியது. ஆனால் இவை புதிதல்ல.
இவையெல்லாம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கள். பனிப்போர் மனப்பான்மையை பிரதிபலிக்கும் பேச்சுக்கள். கொள்கைகளில் பொறாமை கொண்டவர்கள் பேசும் பேச்சு. பனிப்போரை அவர்கள் கைவிட வேண்டும். சீனாவுக்கும், அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே வெறுப்பை விதைப்பதை நிறுத்த வேண்டும். பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும், அமைதிக்கும் கெடுதல் விளைவிக்க முயலக் கூடாது என்றார்.