46 இந்திய செவிலியர்கள் வலுக்கட்டாயமாக மொசூல் நகருக்கு இடமாற்றம்?
டெல்லி: ஈராக்கின் திக்ரித் நகரில் சிக்கித் தவித்த 46 இந்திய செவிலியர்கள் வலுக்கட்டாயமாக மொசூல் நகருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. இதில் ஈராக்கின் பல முக்கிய நகரங்களை அந்த அமைப்பு கைப்பற்றியிருக்கிறது.
அத்துடன் சிரியா, ஈராக்கில் தங்கள் வசமுள்ள பகுதிகளை இணைத்து 'இஸ்லாமிய தேசம்" என்ற தனிநாட்டையும் பிரகடனப்படுத்தியுள்ளனர். இந்த உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
மொசூல் நகரில் 39 இந்தியர்கள் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்களது கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. திக்ரித் நகரில் 46 இந்திய செவிலியர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்களுடன் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகம் தொடர்பு கொண்டு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தது. இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் நேற்று 46 இந்திய செவிலியர்களை ஆங்கிலத்தில் பேசிய ஒரு குழுவினர், வலுக்கட்டாயமாக 2 பேருந்துகளில் ஏற்றி மொசூல் நகருக்கு அனுப்பி வைத்துள்ளது.
இதை கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டியும் உறுதி செய்துள்ளார். அவர்கள் ஏன் வலுக்கட்டாயமாக ஐ.எஸ்.ஐ.எஸ். வசமுள்ள மொசூல் நகரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது தெரியாததால் கேரளாவில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.