இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி
ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது. மனாடோ நகருக்கு தென்கிழக்கே 185 கிமீ தொலைவில் 24 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.
சுலவேசி தீவுக் கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கும் ஏற்பட்டதாக இந்தோனேசிய புவி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில், நிலநடுக்கம் ஏற்பட்டதால், வீதிகளில் மக்கள் தஞ்சமடைந்தனர். பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு இந்தோனேஷியாவின் பலு நகரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் 4,300 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.