சபரிமலை விவகாரம்... அமெரிக்காவிலும் பரவியது போராட்டம்
Recommended Video
கலிபோர்னியா : சபரிமலை அய்யப்பன் சன்னிதானத்திற்குள் பெண்களை அனுமதிக்க கூடாது என அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்றது.
இந்தியாவில் 10 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள் கேரளாவிலுள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு சென்று வழிபட இருந்த தடை, உச்சநீதிமன்றத்தால் விலக்கப்பட்டு இரண்டு மாதங்களாகிறது.
இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், சபரிமலை அய்யப்பன் சன்னிதானத்திற்குள் இரண்டு பெண்கள் அனுமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு கேரளாவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனிடையே நேற்று, இலங்கையைச் சேர்ந்த பெண் 18 படி ஏறி சாமி தரிசனம் செய்துள்ள நிகழ்வு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக, சங்க் பரிவார் மற்றும் சபரிமலை கர்ம சமிதி சங்கம் சார்பில் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும், வன்முறை சம்பவங்கள் எதிரொலி காரணமாக பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாளுக்கு, நாள் சபரிமலைக்குள் பெண்கள் நுழைவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது. அந்த வகையில், இந்து கோவில்களை காக்க வேண்டும், இந்து மதத்தை புண்படுத்த கூடாது என வலியுறுத்தி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அய்யப்பன் சுவாமி பக்தி பாடல்களை பாடியும், கைகளில் பதாகைகளை ஏந்தியும் கோஷமிட்டனர். ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டம் போல் சபரிமலை விவகாரமும் வெளிநாடுகளுக்கு பரவ தொடங்க உள்ளது.