குழந்தையுடன் கல்லூரி சென்று “பர்ஸ்ட் கிளாஸ்” மார்க் பெற்ற பெண்- கொண்டாடும் ஸ்காட்லாந்து!
எடின்பர்க்: ஸ்காட்லாந்தில் பெண் ஒருவர் குடும்பம், குழந்தை, படிப்பு ஆகியவற்றை சரியாக கையாண்டு முதல்வகுப்பிலும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்தீன் நகரின் ராபர்ட் கோர்டென் பல்கலைக்கழகத்தில் நிறுவன மேலாண்மை படிக்கத்தொடங்கியபோது ஆவா சிம் என்ற பெண் கர்ப்பமடைந்தார். அங்கு மாணவி கர்ப்பமாவது பற்றியெல்லாம் கல்லூரிகளுக்கு கவலை இல்லை. பெண்கள் கர்ப்பகாலத்தில், அதிகபட்சம் 2 மாதங்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் அவ்வளவுதான்.
ஆவா தனது கல்லூரிக்கு, குழந்தை பிறந்த அடுத்த மாதம் முதல் குழந்தையுடன் வகுப்புக்கு வந்து பயிலத்தொடங்கினார். அவர் படிப்பின் ஆராய்ச்சிக்காக உள்ளூர் அதிகாரிகளுடன் வேலையும் செய்து வந்தார். அதுதவிர, ஒரு பகுதி நேர வேலை, குழந்தை, வீடு மற்றும் படிப்பு என அனைத்தையும் முறையாக கையாண்டு தான் நினைத்தபடியே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சமீபத்தில் பட்டம் பெற்றுள்ளார் ஆவா.
இத்தனைக்கும் இடையிலும், அவர் தனது பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட போட்டியிலும் பங்கேற்றிருக்கிறார். தற்போது இரண்டாவது குழந்தைக்காக கர்ப்பம் தரித்துள்ள அவர் தனது மேற்படிப்பை குழந்தை பிறப்புக்கு பிறகு தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.
முதல்முறை கர்ப்பமானபோதே எவ்விதத்திலும் அது தனது படிப்பை பாதிக்கக்கூடாது என்று தீர்மானம் செய்துகொண்டதாக ஆவா குறிப்பிட்டார். இப்படி பொறுப்பாக தனது வாழ்க்கையை கையாளும் ஆவா உள்ளூரில் எல்லோராலும் மதிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.