ஐஎஸ் தலை துண்டிப்பு வீடியோவை போட்டுக் காண்பித்து பள்ளி மாணவர்களை மிரள வைத்த ஆசிரியை
நியூயார்க்: அமெரிக்காவில் ஆசிரியை ஒருவர் 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி பிணையக் கைதி ஒருவரின் தலையை துண்டிக்கும் வீடியோவை போட்டுக் காண்பித்து மிரள வைத்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது தெற்கு பிராங்க்ஸ் அகாடமி எனப்படும் பள்ளி. அந்த பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் அலெக்சிஸ் நசாரியோ. அவர் 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி பிணையக் கைதி ஒருவரின் தலையை துண்டிக்கும் வீடியோவை போட்டுக் காண்பித்துள்ளார்.
வீடியோவை பார்த்த மாணவ, மாணவியர் மிரண்டு போய் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வீடியோவை பார்த்த மாணவி ஒருவர் கூறுகையில்,
நான் வீடியோவை பார்த்து பயந்துவிட்டேன். ஒருவரின் தலையை துண்டிக்கும் வீடியோவை ஆசிரியை காண்பித்தார். நான் வீட்டில் கூட பயமாக இருக்கும் வீடியோக்களை பார்க்க மாட்டேன் என்றார்.
அலெக்சிஸ் கூறுகையில்,
நான் மாணவ, மாணவியருக்கு வேறு ஒரு வீடியோவை போட்டுக் காண்பிக்க தேடியபோது தவறுதலாக ஐஎஸ்ஐஎஸ் வீடியோவை கிளிக் செய்துவிட்டேன். நான் வேண்டும் என்றே அவ்வாறு செய்யவில்லை என்றார்.
இதையடுத்து மூத்த ஆசிரியையான அலெக்சிஸுக்கு ரூ.20 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்டது.