'கடி' வீரருக்கு ஆதரவாக ஃபிஃபா நிர்வாகிகளை கெட்ட வார்த்தையில் திட்டிய உருகுவே அதிபர்
உலக கோப்பை கால்பந்தாட்ட குரூப் போட்டியின்போது, இத்தாலி மற்றும் உருகுவே அணிகள் கடந்த வாரம் மோதின. அதில், இத்தாலி வெற்றி பெற்றது. போட்டி நடந்துகொண்டிருந்தபோது, இத்தாலி வீரர் ஜியோர்ஜியோ சில்லினியை, உருகுவே வீரர் லூயிஸ் சுவாரஸ் கடித்துவிட்டார். இதைத்தொடர்ந்து உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் இருந்து அவரை வெளியேற்றிய பிபா நிர்வாகம், உருகுவே ஆடும், 9 போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. மேலும் நான்கு மாதகாலத்துக்கு கால்பந்தாட்டம் தொடர்பான நடவடிக்கைகளில் இருந்து சுவாரஸ், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
உலக கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்ட சுவாரஸ், தாயகம் திரும்பியபோது, விமான நிலையத்துக்கு சென்று அந்த நாட்டு அதிபர் ஜோஸ் முஜிகா வரவேற்பளித்தார். இந்நிலையில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அதிபர் முஜிகா, ஃபிஃபா ஒரு பழைய "......" கூட்டம் என்று தெரிவித்தார். உடனடியாக தவறை உணர்ந்து தனது வாயில் கை வைத்துக்கொண்டார்.
இருப்பினும், அந்த வார்த்தையை தொலைக்காட்சியில் ஒளிபரப்பலாமா என்று டிவி சேனல், அதிபரிடம் கேட்டதற்கு, ஒளிபரப்ப சம்மதமும் தெரிவித்துவிட்டார்.