தமிழில் நாலு வார்த்தை சேர்ந்தாற் போல பேசத் தெரியாத சுப்ரமணிய சுவாமிக்கு தமிழ் ரத்னா விருது!
நியூயார்க்: தமிழில் ஒரு வரியைக் கூட சேர்ந்தாற் போல பேசத் தெரியாத பாஜக முக்கியத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அமெரிக்க தமிழ்ச் சங்கம் தமிழ் ரத்னா விருது வழங்கியுள்ளது.
பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தில் உள்ளார். நியூயார்க் நகரில், அமெரிக்க தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்திய விழா ஒன்றில் சுப்பிரமணியன் சுவாமிக்கு தமிழ் ரத்னா விருது வழங்கப்பட்டது.
ஊழலுக்கு எதிராக செயல்பட்டு வருவதற்கும், இந்திய ஆட்சி முறையில் ஒளிவு மறைவற்ற வெளிப்படைத்தன்மை தேவை என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்கும் சுப்பிரமணியன் சுவாமிக்கு தமிழ் ரத்னா விருது வழங்கப்பட்டதாக அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் தலைவரான பிரகாஷ் சாமி தெரிவித்துள்ளார்.
இந்த விருது ஏற்கனவே இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் இயக்குநர் பாரதிராஜாவிற்கு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்பிரமணியம் சாமி தமிழ் பேசினால் அது தமிழா என்று பலருக்கும் சந்தேகம் வரும். அப்படித்தான் பிரித்து மேய்வார் தனது தமிழ் பேச்சுக்களை. இந்த நிலையில் அவருக்கு தமிழ் ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.