பல நாளாக உணவு இல்லை.. கம்பீர சிங்கங்களின் சோகம்.. கண்ணீரை வரவழைக்கும் தோற்றம்!
கார்டூமி : சூடானின் தலைநகரில் உள்ள ஒரு தேசிய வனவிலங்கு பூங்காவில் "ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்வாய்ப்பட்ட" நிலையில் எலும்பும் தோலுமாக இருக்கும் ஆப்பிரிக்க சிங்கங்களை காப்பாற்ற உதவ வேண்டும் என ஆன்லைனில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நிமிர்ந்த நடை, கர்ஜனை, பார்த்தவுடன் பயத்தை வரவழைக்கும் கம்பீரமான உடல்வாகு கொண்ட தோற்றம், எந்த விலங்கையும் வீழ்த்தும் உடல் வலிமை என பல அம்சங்களை கொண்டது சிங்கம்.
காட்டுக்கே ராஜா என்று அழைக்கப்படும் சிங்கம் காட்டில் உணவு கிடைக்காமல் எலும்பும் தோலுமாக சீக்கு வந்து காணப்படுவது பார்ப்போரை கண் கலங்க வைத்துள்ளது.
அல்குரேஷி பூங்கா
சூடானின் தலைநகர் கார்டூமில் உள்ள அல்-குரேஷி என்ற தேசிய வனவிலங்கு பூங்காவில் "ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்வாய்ப்பட்ட" நிலையில் எலும்பும் தோலுமாக இருக்கும் ஆப்பிரிக்க சிங்கங்களை காப்பாற்ற உதவ வேண்டும் என ஆன்லைனில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களை பார்த்து கண் கலங்காதவர்களே இல்லை. அந்த அளவுக்கு சிங்கங்கள் மோசமாக காணப்படுகிறது.
சிங்கங்கள் நிலை
பல நாள் சாப்பிடாமல், உணவும் கிடைக்காமல் சிங்கங்கள் பார்க்கவே மோசமாக இருக்கின்றன. ஆனால் சூடான் அரசோ அங்குள்ள மக்களுக்கே உணவு அளிக்க வசதி இல்லை என்கிற போது சிங்கங்களுக்கு உணவு அளித்திடுமா என்ன.
வேறு இடம் தேவை
சிங்கங்கள் உணவு இல்லாமல் அவதிப்படும் புகைப்படங்களை பார்த்த பலர் இந்தச் சிங்கங்களுக்குப் பாதுகாப்பான நல்ல வசதியுடன் கூடிய வேறு இடம் தேவை என சமூகவலைதளத்தில் குரலெழுப்பி வருகின்றனர்.
காப்பாற்றும் ஊழியர்கள்
#SudanAnimalRescue என்ற ஹாஸ்டேக் உலகம் முழுவதும் பரவி வருகிறது. சூடான் சிங்கங்களுக்கு மக்கள் நிதி உதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதனிடையே தற்போதைய நிலையில் சிங்கத்தை அந்த பூங்காவில் உள்ள ஊழியர்கள் தங்களால் முடிந்த உணவு கொடுத்து காப்பாற்ற முயன்று வருகிறார்கள். இது தொடர்பாக பூங்கா அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கூறுகையில், கடந்த சில வாரங்களாக சிங்கங்களின் நிலை மோசமடைந்துள்ளதாகவும், சிலர் உடலில் மூன்றில் இரண்டு பங்கு எடையை இழந்ததாகவும் வேதனை தெரிவித்தனர்.