பாக். மொகரம் ஊர்வலத்தில் பயங்கரம்.. தற்கொலைப் படைத் தாக்குதலில் 22 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் நடத்திய மொகரம் ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 22 பேர் பலியாகியுள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் மொகரம் பண்டிகைக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், சிந்து மாகாணத்தில் உள்ள ஜகோபாபாத் என்ற நகரில் இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தற்கொலை தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். இது தற்கொலைத் தாக்குதல்தான் என்பதை சிந்து மாகாண காவல் துறை துணைக் கண்காணிபாளர் குடா பஹாஷ் உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை தலைவர் குலாம் முர்தஸ, மொகரம் மாதத்தின் 10-ஆவது நாளில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அசுரா ஊர்வலத்தை நடத்துவர். இந்த ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது, தன் உடம்பில் கட்டிவைத்திருந்த வெடிகுண்டை பயங்கரவாதி ஒருவர் வெடிக்கச் செய்தார். இதில், ஊர்வலத்தில் பங்கேற்ற 22 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார் குலாம் முர்தஸா. சிந்து மாகாணத்தில் கடந்த இரு நாட்களில் நிகழ்த்தப்பட்ட இரண்டாவது பயங்கரவாத சம்பவம் இதுவாகும்.
பலூசிஸ்தான் மாகாணத்தில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தில் வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. அங்குள்ள காச்சி மாவட்டத்திலுள்ள ஷியாக்களின் வழிபாட்டுத் தலத்தில் வியாழக்கிழமை மாலை பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பர்தா அணிந்து வந்த ஓர் இளைஞர், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஆறு பேர், 10 முதல் 12 வயதுடைய சிறுவர்கள் என பலூசிஸ்தான் மாகாண உள்துறை அமைச்சர் சர்ஃபராஸ் புக்தி தெரிவித்தார். இந்த நிலையில், காயமடைந்தவர்களில் மேலும் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 12ஆக உயர்ந்தது.
தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட நபரின் வயது 18ஆக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தானில் சிறுபான்மையினரான ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து, சன்னி பிரிவு பயங்கரவாத அமைப்புகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இன்ற நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும் சன்னி பிரிவு முஸ்லிம்கள் ஆதரவு தீவிரவாத அமைப்பான லஸ்கர் இ ஜாங்வி இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பாகிஸ்தானில் சிறுபான்மையினரான ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து, சன்னி பிரிவு பயங்கரவாத அமைப்புகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.