ஏமனில் தற்கொலைப்படைத் தாக்குதல்.. 30 ராணுவ வீரர்கள் பலி!சம்பளம் வாங்க வரிசையில் நின்றபோது பரிதாபம்
ஏமனில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 30 வீரர்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
ஏடன்: ஏமனின் தெற்கு துறைமுக நகரான ஏடன் பகுதியில் தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 30 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பலியாயினர்.
ஏடன் நகரின் அல்-சோலன் பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சம்பளம் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் நின்றுக் கொண்டிருந்தனர். அப்போது வெடிகுண்டுகளுடன் அங்கு வந்த மர்மநபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இதில் வரிசையில் நின்றிருந்த 30 ராணுவ வீரர்கள் உடல்சிதறி உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கடந்த 8 நாட்களுக்கு முன்பு அங்கு நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 48 வீரர்கள் கொல்லப்பட்டனர். 29 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குலுக்கு ஐஎஸ்ஐஎல் அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.
துறைமுக நகரான ஏடன் பகுதி ஏமன் அரசின் தற்காலிக தளமாக தற்போது உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக வெடிகுண்டு தாக்குதல்கள், துப்பாக்கிச்சூடு ஆகியவை அதிகரித்துள்ளது. அதுவும் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளை குறி வைத்தே இந்த தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிபரின் ஆதரவு படைகள் ஏடன் நகரில் இருந்த ஹவுதி போராளிகளை வெளியேற்றிவிட்டு அங்கு தனது படைகளை அமைத்தனர். இந்நிலையில் அங்கு தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே அங்கு காலூன்ற முயலும் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தா தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த ஏமன் ராணுவம் மற்றும் அரபு கூட்டுப்படைகள் கடுமையாக போராடி வருகின்றன. கடந்த 20 மாதங்களில் மட்டும் அங்கு நடைபெற்று வரும் சண்டையால் 10,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.