நைஜீரிய மார்க்கெட்டில் குண்டுவெடிப்பு- 32 பேர் பலி, 80 பேர் காயம்
ஓலா: நைஜீரியாவில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள காய்கறி மார்க்கெட்டில் குண்டு வெடித்ததில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோ ஹரம் தீவிரவாதிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்கள் மற்றும் கிராமங்களைக் குறி வைத்து அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை 16 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் போகோ ஹரம் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அங்குள்ள ஓலா நகரில் காய்கறி மார்க்கெட் ஒன்றில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அடையாளம் தெரியாத நபர் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்து இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்தக் குண்டுவெடிப்பிற்கு இதுவரை எந்தவொரு இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில், போகோ ஹரம் தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.