ஓமனில் தற்கொலை செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, ஆனால்...
துபாய்: ஓமனில் தற்கொலை செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
2013ம் ஆண்டில் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்த இந்தியர்களில் மாதாமாதம் குறைந்தது 5 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த எண்ணிக்கை 2014ம் ஆண்டு குறைந்துள்ளது.
கடந்த ஆண்டில் மாதம் 3 இந்தியர்கள் தற்கொலை செய்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை
2013ம் ஆண்டில் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்த இந்தியர்களில் 54 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 34 ஆக குறைந்தது. முன்னதாக 2012ம் ஆண்டில் 63 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதலில் தெரிவித்துள்ளது.
ஓமன்
2014ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி வரை ஓமனில் 603,473 இந்தியர்கள் பணியாற்றியுள்ளனர். இதுவே கடந்த 2013ம் ஆண்டில் ஓமனில் 5 லட்சத்து 99 ஆயிரத்து 473 இந்தியர்கள் வேலை பார்த்துள்ளனர்.
இந்தியர்கள்
ஓமனில் தற்கொலை செய்து கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் இன்னும் இந்தியர்கள் தற்கொலை செய்யத் தான் செய்கிறார்கள். அவர்கள் ஏன் தற்கொலை செய்கிறார்கள் என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்று இந்திய தூதரக வழக்கறிஞர் தீபா சுதிர் தெரிவித்துள்ளார்.
உலக அளவில்
2012ம் ஆண்டில் உலக அளவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் அதிகமானோர் இந்தியர்கள் என்று 2014ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெல்ப்லைன்
ஓமனில் வசிக்கும் இந்தியர்களின் குறைகளை தீர்க்க அங்குள்ள இந்திய தூதரகம் 24 மணிநேரம் செயல்படும் ஹெல்ப்லைன் மற்றும் டோல் ப்ரீ ஹெல்ப்லைன் அமைத்துள்ளது. இந்த அழைப்புகளை தூதரகத்தில் உள்ள சமூக நல ஊழியர்கள் கவனித்து வருகிறார்கள். அவசர அழைப்புகளை மூத்த அதிகாரிகள் கவனிக்கிறார்கள்.