ரத்தச் சிவப்பில் தகித்த நிலா... கூடவே வானமும்!
நியூயார்க்: உலகம் அழியப்போகிறது என்ற பீதியையும் தாண்டி உலகத்தின் பல்வேறு பகுதிகளில் ரத்தச் சிவப்பு நிலாவை மக்கள் ஆச்சர்யத்துடன் நேரில் தரிசித்துள்ளனர்.
ஆண்டுதோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் சூப்பர் மூன் ஏற்படுவது வழக்கம். இந்தாண்டு சூப்பர் மூனின் போது சந்திர கிரகணமும் சேர்ந்து கொண்டதால், நிலா ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சி அளித்தது.
ஏற்கனவே, கடந்தாண்டு ஏப்ரல் 15, அக்டோபர் 8ம் தேதிகளிலும், இந்தாண்டு ஏப்ரல் 14ம் தேதியிலும் என மூன்று முறை "ரத்த நிலா" தோன்றியது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன் தினமும் 4வது முறையாக ரத்த நிலா தோன்றியது. இப்படி அடுத்தடுத்து 4 முறை ரத்தச் சிவப்பு நிலா தோன்றினால் உலகம் அழிவைச் சந்திக்கும் என சிலர் பீதியைக் கிளப்பினார்கள்.
விளக்கம்...
ரத்தச் சிவப்பு நிலாவிற்கு விஞ்ஞானிகள் அறிவியல் ரீதியான காரணங்களை எடுத்துரைத்தனர். சந்திர கிரகணத்தன்று சூப்பர் மூன் வருவதால் நிலா, பூமிக்கு அருகில் வருகிறது.
ரத்தச் நிலா...
இதனால் சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுவதால் சிவப்பு நிற அலைவரிசை, நிலவின் மேற்பரப்பில் பட்டுப்பிரதிபலிக்கும். அதனால் ஆரஞ்சு நிறத்திலிருந்து ரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும். இதனால் "ரத்த நிலா" என அழைக்கப் படுகிறது என அவர்கள் விளக்கமளித்தனர்.
ரத்தச் சிவப்பு நிலா...
இந்நிலையில், வானில் ரத்தச் சிவப்பில் தோன்றிய நிலாவைப் பலரும் ஆவலுடன் நேரில் பார்த்துள்ளனர். அதோடு சிலர் அதனை புகைப்படங்களாகவும் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
வானமும் சிவப்பானது...
பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல, ரத்தச் சிவப்பு நிலாவோடு சேர்ந்து வானமும் சிவப்பு சாயம் பூசியது போல் காணப்பட்டதாக இந்நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தெரியவில்லை...
இந்த கிரகணகத்தை வடஅமெரிக்கா மற்றும் உலகின் கிழக்கு பகுதிகளில் நாடுகளில் உள்ளவர்கள் நேரில் பார்த்துள்ளனர். இந்தியாவில் இது தெரியவில்லை.
அடுத்த ரத்தச்சிவப்பு நிலா...
2033ம் ஆண்டுவரை மீண்டும் இதுபோன்று ரத்த நிலா தோன்றுவதற்கான வாய்ப்பு இல்லை என்று வானியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.