நேபாள பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் சுஷில் கொய்ராலா - புதிய பிரதமர் தேர்வு மும்முரம்
காத்மாண்டு: நேபாள நாட்டில் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை நிறைவேற்றிய பிரதமர் சுஷில் கொய்ராலா தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தை ஏழு மாகாணங்களாக பிரிக்க இந்த புதிய அரசியல் சாசனத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட சமுதாயம் பாதிப்படைவதாக கூறப்படுகிறது.
ஆகவே, அந்த சமுதாயம் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறது. இதற்கிடையே பிரதமராக இருந்து சுஷில் கொய்ராலா தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆகவே, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணியில் நேபாளம் இறங்கியுள்ளது.
இன்று ராஜினாமா கடிதத்தை நேபாள அதிபர் ராம் பரன் யாதவிடம் முறைப்படி அவர் ஒப்படைத்தார். நாளை புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்றம் கூடுகின்றது.
இந்த பதவிக்கு நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான கே.பி.ஓலி போட்டியிடுகிறார். அந்நாட்டின் மிகப்பெரிய கட்சியான நேபாள காங்கிரஸ், தனது கட்சியின் பிரதமர் வேட்பாளராக சுஷில் கொய்ராலாவையே மீண்டும் நிறுத்த முடிவு செய்துள்ளது. எனவே, கே.பி.ஓலிக்கும், சுஷில் கொய்ராலாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுமென எதிர்பார்க்கப்படுகிறது.