பாரீஸ் தாக்குதல்களின் முக்கிய மூளையான அப்துல் ஹமீத் போலீஸ் சோதனையின்போது தற்கொலை?
பாரீஸ்: பாரீஸ் தாக்குதல்களுக்கு முக்கிய மூளையாக இருந்த பெல்ஜியத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீத் அபாத் தற்கொலை செய்து கொண்டதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 129 பேர் பலியாகினர். இதையடுத்து பாரீஸின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தப்பியோடிய தீவிரவாதிகளை தேடி வருகிறார்கள்.
புதன்கிழமை பாரீஸின் புறநகர் பகுதியான செயின்ட் டெனிஸில் உள்ள ஒரு வீட்டை நூறு போலீசாரும், ராணுவத்தினரும் சூழ்ந்தனர். அப்போது வீட்டில் இருந்த தீவிரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும், ராணுவத்தினரும் தீவிரவாதிகளை நோக்கி சுட்டனர்.
இதில் போலீசார் சிலர் காயம் அடைந்தனர். வீட்டில் இருந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பெண் தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இந்நிலையில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்துகையில் வீட்டில் இருந்த பாரீஸ் தாக்குதல்களுக்கு முக்கிய மூளையான பெல்ஜியத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீத் அபாத் தற்கொலை செய்து கொண்டதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவலை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் பிரான்காய்ஸ் ரிச்சியர் உறுதி செய்துள்ளார்.
நேற்றைய சோதனைகளின்போது செயின்ட் டெனிஸ் பகுதியில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பிரான்காய்ஸ் கூறுகையில்,
அப்துல் ஹமீத் தற்கொலை செய்து கொண்டார் என்பதை உறுதி செய்யும் தகவல் எனக்கு கிடைத்துள்ளது. இது குறித்து என்னிடம் எந்த ஆவணமும் இல்லை என்றார்.
மரபணு பரிசோதனையின் மூலம் தான் ஹமீத் இறந்தது உறுதி செய்யப்படும். ஆனால் அதற்கு கால அவகாசம் ஆகும் என்று கூறப்படுகிறது. குண்டுகளை வெடிக்கச் செய்து இறந்த பெண் ஹமீதின் சகோதரி ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.