திரும்பி செல்லுங்கள்.. இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த சீனாவின் மர்ம உளவு கப்பல்.. விரட்டி அடிப்பு!
சீனாவின் உளவு கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெய்ஜிங்: சீனாவின் உளவு கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்திய கடற்படை இந்த கப்பலை எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பியது.
உலகிலேயே சீனாவின் கடற்படைதான் தற்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது ஆசியாவில் இருக்கும் இந்தியா போன்ற மற்ற நாடுகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலகில் யாரும் கட்டாத வேகத்தில் கடற்படை தளவாடங்களை உலகம் முழுக்க சீனா கட்டி வருகிறது.
அதிலும் தன்னுடைய கடற்பகுதியில் மட்டுமின்றி, பிற நாட்டின் கடற்பகுதியில் சீனா மிக வேகமாக கடற்படை தளவாடங்களை அமைத்து வருகிறது. பல சமயங்களில் சீனாவின் கடற்படை மற்ற நாடுகளின் கடற் பகுதிக்கு செல்வதும் வழக்கமாக நடந்து வருகிறது.
அனுமதி இல்லை
மற்ற நாடுகளின் கடல் பகுதிக்கு செல்வது என்றால் அனுமதி இல்லாமல் செல்வது ஆகும். இது உலக எல்லை விதிக்கு எதிரானது. அதேபோல் தைவான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற சிறிய நாடுகளை சீனா மிக மோசமாக அச்சுறுத்தி வருகிறது. அவர்களின் கடல் பகுதியில் ஏற்கனவே தன்னுடைய கடற்படை தளவாடங்களை சீனா அமைந்துவிட்டது.
என்ன வேகம்
சீனாவின் இந்த வேகமாக வளர்ச்சிக்கு பாகிஸ்தானும் உதவி வருகிறது. பாகிஸ்தானின் கடல் பகுதியில் விரைவில் சீனா கண்டிப்பாக கடற்படை தளவாடத்தை அமைக்கும் திட்டத்தில் உள்ளது. இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே வெற்றிபெற்றதால் அங்கும் புதிய கடற்படை தளத்தை அமைக்க சீனா முயன்று வருகிறது.
உளவு கப்பல்
இந்த நிலையில்தான் சீனாவின் உளவு கப்பல் இன்று இந்திய கடல்பகுதிக்குள் நுழைந்துள்ளது. இந்தியாவை வேவு பார்க்கும் வகையில் இந்த கப்பல் உள்ளே நுழைந்துள்ளது. இது தொடர்பாக தற்போது இந்திய கடற்படையின் தலைமை அட்மிரல் கரம்பீர் சிங் பேட்டி அளித்துள்ளார்.
என்ன பேட்டி
அவர் தனது பேட்டியில், இந்திய பெருங்கடலில் சீனாவின் கப்பல்கள் எல்லை மீறுவது அடிக்கடி நடந்து வருகிறது. 2008ல் இருந்தே இது நடந்து வருகிறது. நாங்கள் இதை மிகவும் கவனமாக உற்றுநோக்கி வருகிறோம். சீனாவின் கடல் ஆய்வு கப்பல்கள் அவ்வப்போது இங்கு வரும்.
என்ன கப்பல்கள்
இது போன்ற கப்பல்கள் வருடத்திற்கு 7-8 இந்திய கடல் பகுதிக்கு வரும். சமயத்தில் இந்திய கடல் பகுதியில் இந்த கப்பல்கள் ஆராய்ச்சி நடத்தும். இந்த நிலையில்தான் இந்திய எல்லைக்குள் ஷி யான் 1 என்ற சீனாவின் மர்ம கப்பல் வந்தது.
உளவு கப்பல்
ஆனால் இது வெறும் ஆராய்ச்சி கப்பல் கிடையாது. பெரும்பாலும், இந்த கப்பல் உளவு பார்க்க வேண்டும் என்று வந்து இருக்கலாம். ஆகவே இந்த கப்பலை நாங்கள் விரட்டி அடித்தோம். சீன கப்பல் எது அனுமதி இன்றி கடல் எல்லைக்குள் வந்தாலும் அதை நாங்கள் விரட்டி அடிப்போம்.
கடல்
இதேபோல் கடல் வழியே இந்தியா மீது சில நாடுகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதனால் கடல் எல்லையை நாங்கள் மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம், என்று குறிப்பிட்டார்.