ஸ்வீடனின் 2வது பெரிய ஏர்போர்ட்டில் குண்டு வெடித்ததாக பீதி... 2 மர்மப் பைகள் சிக்கின
ஸ்டாக்ஹோம்: ஸ்வீடன் நாட்டின் 2வது பெரிய விமான நிலையத்தில் இன்று குண்டுவெடிப்பு நடந்ததாக பெரும் பீதி ஏற்பட்டது. ஆனால் வெடிகுண்டுகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 2 மர்மப் பைகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஸ்வீடனின் லான்ட்வெட்டர் நகரில் உள்ள விமான நிலையம் அந்த நாட்டிலேயே 2வது பெரிய விமான நிலையமாகும். இந்த விமான நிலையத்தில் இன்று மர்மமான "பொருள்" வெடித்ததாக தகவல் பரவியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
URGENT: #Sweden's @landvetter airport evacuated due to explosion threat https://t.co/8pgSPHYAvp pic.twitter.com/vZ3S1R37AH
— Sputnik (@SputnikInt) March 31, 2016
விமான நிலையம் முழுவதும் காலி செய்யப்பட்டது. பயணிகள் அனைவரும் வெளியேற்றப்படடனர். பாதுகாப்புப் படையினர் வெடி விபத்து நடந்ததாக கூறப்பட்டு உள்நாட்டு முனையப் பகுதியை மூடி சீல் வைத்தனர்.
அந்தப் பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு 2 மர்மமான பைகள் இருப்பதைப் போலீஸார் பார்த்து அதை மீட்டனர். அது சோதனையிடப்பட்டு வருகிறது.
முன்னதாக இந்த விமான நிலையத்திற்கு வியாழக்கிழமை காலையில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. இதையடுத்து போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் பீட்டர் ஆட்லெர்சன் கூறியுள்ளார்.
இந்த விமான நிலையத்தை நிர்வகித்து வரும் ஸ்வடெவியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உல்ப் வாலின் கூறுகையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. விமான நிலையம் தற்போது போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் கடந்த 22ம் தேதி அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 35 பேர் பலியானார்கள். அதற்கு முன்பு பாரீஸ் தீவிரவாதத் தாக்குதலுக்குள்ளானது. இந்த நிலையில் ஸ்வீடனில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.