ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சுவீடனில் போராட்டம்.. நடுங்கும் குளிரில் பேனர்களை ஏந்தி குழந்தைகள் முழக்கம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சுவீடன் வாழ் தமிழர்கள் போராட்டம் நடத்தினார்கள். நடுங்கும் குளிரிலும் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பேனர்களை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றனர்.
கோதன்பார்க்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழகம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், உலகத் தமிழர்கள் தங்களது ஆதரவு கரங்களை ஜல்லிக்கட்டுக்காக நீட்டி வருகின்றனர்.
சுவீடன் நாட்டில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தியுள்ளனர். சுவீடன் நாட்டில் கோதன்பார்க் நகரில் ஒன்று கூடிய தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணி நடத்தி போராட்டத்தை நடத்தினார்கள்.
அப்போது, பீட்டாவை தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர சட்டத்தைக் கொண்டு வர வேண்டும், விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை சுவீடன் தமிழர்கள் முன்வைத்தனர்.
ஒரு வாரமாக தமிழகத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் எங்களால் கலந்து கொள்ள முடியாததால் சுவீடன் வாழ் தமிழர்கள் இங்கு ஒன்று கூடி உணர்வு பூர்வமாக போராட்டம் நடத்தி வருகிறோம் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும், 500 ஆண்டுகள் பழமையானதையே பாரம்பரியம் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் நாம் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். தமிழர்களின் பண்பாட்டை அழிக்க சதி நடந்து வருகிறது. நமது நாட்டு மாடுகளை அழிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இவற்றை எதிர்க்க வேண்டும். மேலும் அவசரச் சட்டம் நமக்கு தேவையில்லை. நிரந்தரச் சட்டமே தேவை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.
போராட்டத்தின் போது "வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்; எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு; தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்டா" என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இறுதியாக, போராட்டத்தின் முடிவில் தமிழ் தாய் வாழ்த்து பாடி போராட்டம் முடிக்கப்பட்டது.