முதல்ல அந்த இமெயில் அலர்ட்டை ஆப் பண்ணுங்கப்பா.. கொஞ்சமாவது ஸ்டிரெஸ் குறையும்!
லண்டன்: ஸ்மார்ட்போன்களில் இமெயில் நோட்டிபிகேஷனை அணைத்து வைப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் என புதிய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
செல்போன் இல்லாத மனிதர்களைக் காண்பது அரிது என்ற காலம் மாறிப் போய், ஸ்மார்ட்போன் இல்லாதவர்களைக் காண்பது அரிதிலும் அரிது என்ற சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். ஒவ்வொரு கம்பெனியும் தங்களது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக போட்டி போட்டுக் கொண்டு மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகின்றன.
இதனால் மனிதர்களோடு பேசுவது குறைந்து மக்கள் எப்போதும் செல்போனை ஆராய்ந்துக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் மனிதர்கள் பல்வேறு மன அழுத்தத்திற்கு ஆளாவதாக முந்தைய ஆய்வுகள் கூறி வந்தன.
இந்நிலையில், ஸ்மார்ட்போனில் இமெயில் வருவதைத் தெரியப்படுத்தும் வசதியை அணைத்து வைப்பதன் மூலம் மன அழுத்தம் குறைவதற்கு வாய்ப்பிருப்பதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
இமெயில்...
கடந்த 1970ம் ஆண்டு இமெயில் வசதி கண்டுபிடிக்கப்பட்டது. அதுமுதல் பல்வேறு வளர்ச்சிகளைச் சந்தித்துள்ள தொழில் மற்றும் தனிப்பட்ட முறையில் இணையத்தில் மற்றவர்களைத் தொடர்பு கொள்ள முக்கிய பங்காற்றி வருகிறது.
புதிய ஆய்வு...
இமெயில்களால் நன்மை இருப்பதைப் போலவே தீமையும் இருக்கத்தான் செய்கிறது. இது தொடர்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியது.
2000 பேர் பங்கேற்பு...
பல்வேறு நிறுவனங்களில் பணி புரியும் சுமார் 2 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது தொழில்நுட்பம், பழக்கவழக்கம், வேலை-குடும்ப சமன் உள்ளிட்டவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
அதிக மனஅழுத்தம்...
இந்த ஆய்வில், தங்களது ஸ்மார்ட்போனில் தானாகவே இமெயில் வந்து சேரும் வகையில் செட்டிங் வைத்துள்ள தொழிலாளர்கள் அதிக அளவில் மனஅழுத்தத்திற்கு ஆளாவது தெரிய வந்துள்ளது.
எங்கேயும், எப்போதும்...
அதிகாலையில் எழுந்தவுடன் இமெயிலை சரி பார்ப்பது, இரவு படுக்கச் சென்ற பின்னரும் இமெயிலைச் சரி பார்ப்பது என எப்போதும் அவர்கள் இமெயில் அழுத்தத்திற்கு ஆளாவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உயரதிகாரிகளுக்கே அதிகம்...
அதிலும் குறிப்பாக மற்றவர்களைக் காட்டிலும் உயரதிகாரிகளே இந்த இமெயில் மன அழுத்தத்தால் அதிகளவில் பாதிக்கப் படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.
அட்வைஸ்...
எனவே, தான் தேவையில்லாத சமயங்களில் போன்களில் இமெயில் அலர்ட்டை அணைத்து வைப்பது மனநலத்திற்கு நல்லது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
முடிஞ்சா போனையே கூட ஆப் பண்ணிட்டு பேனை நல்லா புல்லா சுத்த விட்டுட்டு குறட்டை விட்டு தூங்கிப் பாருங்க பாஸ்.. சொர்க்கமாக இருக்கும்!