இலங்கை போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை... ஐநா. அறிக்கை விவாதத்தின் போது சுவிஸ் வலியுறுத்தல்
ஜெனிவா : இறுதிப் போரின் போது, இலங்கை போர்க்குற்றம் குறித்து உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வேதேச விசாரணை நடத்தவேண்டும் என சுவிட்சர்லாந்து மற்றும் யூனிசெப், மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற விதிமுறை மீறல்கள், போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. விசாரணை குழு, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தனது அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்தது.
அதில், போர்க்குற்றம் குறித்து சர்வதேச மற்றும், உள்நாட்டு நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்திருந்தது. ஆனால், இலங்கை அரசோ, உள்நாட்டு விசாரணைதான் நடத்தப்படும் என கூறி வருகிறது.
இந்நிலையில் போர்க்குற்றம் குறித்த ஐ.நா.-வின் அறிக்கை மீது பொது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விவாதத்தின்போது பேசிய சுவிட்சர்லாந்து பிரதிநிதி, "இலங்கை மற்றும் விடுதலைப் புலிகள் போர்க் குற்றத்தில் ஈடுப்பட்டது வருத்தம் அளிக்கிறது. உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அமல்படுத்த வேண்டும் என ஆஸ்திரேலியா கூறியுள்ளது.
சர்வேதேச விசாரணை வேண்டும், போரின்போது காணாமல் போன குழந்தைகள் இதுவரை கிடைக்கவில்லை என்று சில மனித உரிமை அமைப்புகளும், யுனிசெப் அமைப்பும் தெரிவித்துள்ளன. இதே போன்று, இலங்கை பிரச்சனையை தீர்க்க சர்வதேச நாடுகளின் உதவி தேவை என்ற கருத்தையே வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.