மனிதர்களின் இருதயத்தை சாப்பிடும் சிரியா தீவிரவாதிகள்: ஐ.நா கூட்டத்தில் அமைச்சர் தகவல்
நியூயார்க்: மனிதர்களின் இருதயங்களைச் சாப்பிடும் அளவிற்கு கொடூரமாக உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராகவே சிரியாவில் போர் நடைபெற்று வருவதாக ஐ.நா.சபை கூட்டத்தில் தெரிவித்துள்ளார் சிரிய வெளியுறவுத்துறை அமைச்சர்.
சமீபத்தில், சிரியாவில் அதிபர் பஷர்- அல் ஆசாத்துக்கு எதிராக போராடும் மக்கள் மீது ராணுவம் ரசாயன குண்டு வீசி தாக்கியதில் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் பலியாகினர். இப்பிரச்சினை உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா சிரியாவின் மீது தாக்குதல் மிரட்டல் விடுத்தது. அதனைத் தொடர்ந்து, ரசாயன ஆயுதங்களை அழிக்க சிரியா சம்மதித்தது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொண்ட சிரியா வெளியுறவுத் துறை அமைச்சர் வாலித் அல்- மொயல்லம் அங்கு கூறியதாவது, ‘சிரியாவில் வன்முறையில் ஈடுபட்டு வரும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக போர் நடைபெற்று வருகிறது. அதை சில நாடுகள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன.
ராணுவத்துடன் போரிட்டு வரும் தீவிரவாதிகள் அரசுக்கு ஆதரவாக இருக்கும் பொதுமக்களை கடத்தி சென்று அவர்களை கொலை செய்கின்றனர். பின்னர், அவர்களின் இருதயங்களை சாப்பிடுகின்றனர்.
அதுமட்டுமின்றி, கடத்தப்பட்டவர்களின் உடல் உறுப்புகளை தனித்தனியாக பிரித்தெடுக்கின்றனர். கை, கால்களை மட்டும் அவர்களின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்து மிரட்டுகின்றனர்.
இக்காட்சிகள் அடங்கிய வீடியோ கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது' என அவர் தெரிவித்துள்ளார்.