இந்திய டாக்டர்கள் டாய்லெட் கழுவத்தான் லாயக்கு.. சிரியா டாக்டர் இனவெறி பேச்சு
லண்டன்: இந்திய டாக்டர்கள் டாய்லெட் கழுவத்தான் லாயக்கு என கருத்து கூறிய சிரியா நாட்டு மருத்துவருக்கு எதிராக இங்கிலாந்து பொது மருத்துவ தீர்ப்பாயத்தில் விசாரணை நடந்து வருகிறது.
2012ம் ஆண்டில், இந்த கமெண்ட் சிரியாவின் டாக்டர் ரஹெப் நுமான் என்பவரால் கூறப்பட்டுள்ளது. நார்த் ஈஸ்ட் இங்கிலாந்து பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஆர்த்தோ பிரிவு டாக்டராக அவர் பணியாற்றியபோது, சக இந்திய டாக்டர்கள் இருவரிடம் இவ்வாறான வார்த்தையை பிரயோகம் செய்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளதால், இனவெறி பேச்சு என்ற அடிப்படையில், பொது மருத்துவ தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது. இந்திய டாக்டர்கள் அராஜக போக்குடன் நடந்துகொள்வதாகவும், தன்மையோடு நோயாளிகளை அணுகுவதில்லை என்றும் விசாரணையின்போது ரஹெப் நுமான் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இனவெறியுடன் அந்த வார்த்தையை கூறவில்லை என டாக்டர் மறுத்துள்ளார். தன்னுடன் பணியாற்றிய இரு இந்திய மருத்துவர்களை வைத்தே, டாய்லெட் கழுவத்தான் அவர்கள் லாயக்கு என்றும், தோட்டவேலை செய்பவர்களை போன்ற நடைமுறையுடன் டாக்டர் தொழிலை அணுகுவதாகவும் நான் கூறியிருந்தேன் என நுமான் தெரிவித்துள்ளார்.
அரேபியர்கள், யூதர்களுடன் தனக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்றும், இந்திய டாக்டர்கள் நடவடிக்கை தனக்கு பிடிக்கவில்லை என்றும் நுமான் கூறியுள்ளார். விசாரணையின் முடிவில், நுமானுக்கு எந்த மாதிரி தண்டனை கிடைக்கும் என்பது தெரியவரும்.