அனிதாவுக்காக... தைவான் தமிழ் சங்கத்தின் நினைவேந்தல்
தைபே: மாணவி அனிதாவின் அகால மறைவுக்கு தைவான் தமிழ் சங்கம் நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
இதுதொடர்பாக தைவான் தமிழ் சங்கத்தின் துணைத் தலைவர் இரமேஷ் பரமசிவம் நமக்கு அனுப்பியுள்ள தகவல்:
கடந்த கல்வியாண்டு முதல் இந்திய நடுவண் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நீட் (NEET) எனும் மருத்துவபடிப்பு ஒழுங்குமுறைத் தேர்வினால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போதிய மதிப்பெண் பெற்றிருந்தும் மருத்துவபடிப்பு மறுக்கப்பட்டுள்ளது.
செல்ல மகள் அனிதா
அவ்வாறு நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு, மருத்துவ படிப்பு மறுக்கப்பட்ட வேதனையில் தமிழகத்தின் செல்ல மருத்துவமகள் அனிதா கடந்த ஒன்றாம் தேதி தன் இன்னுயிர்தனை நீர்த்தார். நீட் தேர்வினை மறுத்து மரித்துப்போன Dr அனிதா அவர்களுக்கு உலகம் முழுவதும் தமிழர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் இத்தேர்வினை தடை செய்யக் கோரி உலக அளவில் அனைத்து பகுதியிலிருந்தும் எதிர்ப்புகளுடன் தமிழர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இரங்கல் கூட்டம்
இந்த நிலையில், தன் உயிர்தனை துச்சமென நினைத்து தமிழகத்தின் அனைத்து மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திய அனிதா அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தைவான் தமிழ்ச் சங்கம் சார்பில், அதன் துணைதலைவர் முனைவர் சங்கர் ராமன் அவர்களின் தலைமையில் தைவான் தேசிய பல்கலைகழகத்தில் (National Taiwan University) இரங்கல் கூட்டம் கடந்த வியாழக்கிழமை (07-09-2017) மாலை 6:00 மணியளவில் ஒருங்கினைக்கப்பட்டது.
நீட் தேவையில்லை
நினைவேந்தல் நிகழ்வுவின் ஒரு பகுதியாக நீட் எனும் மருத்துவபடிப்பு ஒழுங்குமுறைத் தேர்வின் ஒழுங்கீனங்களையும், அதன் தீங்குகளையும் கலந்து கொண்ட உணர்வாளர்கள் எடுத்துரைத்தனர். மேலும் நீட்டுக்கு எதிரான போராட்டம் ஒட்டுமொத்த தமிழ் மாணவர்களுக்கான போராட்டம், இப்போராட்டத்திற்கு வித்திட்ட வீரமங்கையான அனிதாவிற்கு வீரவணக்கம் செலுத்தி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் ஆர்வலர்கள்
இரங்கல் கூட்டத்தில் தைபே மற்றும் ஷிஞ்சு நகரங்களில் இருந்து பெரும்பாலான தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களுடைய ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் பதிவு செய்தார்கள். மாணவி அனிதாவின் புகைப்படங்களை ஏந்தி, நீட் தேர்வுக்கு எதிரான பதாகையுடன், மெழுகுவர்த்தி ஏற்றி இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கனத்த இதயத்துடன்
இளம் தளிர் அனிதாவின் மறைவிற்கு தைவான் தமிழ் சங்கம் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை கனத்த இதயத்துடன் பதிவு செய்கிறது. வெறுமனே இரங்கல் கூட்டம்/அஞ்சலியோடு மட்டும் நின்றுவிடாமல் நமது உரிமைக்காக வெல்லும் வரை போராடவேண்டும் என கேட்டுக்கொண்டு நினைவேந்தல் நிகழ்வு நிறைவுற்றது.