பொங்கலோ பொங்கல்.. தைவானைக் கலக்கிய தை பிறப்பு.. 8வது ஆண்டாக தமிழர்கள் கொண்டாட்டம்!
தைபே: தைவானில் 8-ம் ஆண்டு பொங்கல் விழா தைவான் தமிழ்ச் சங்கம் சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
உலக தமிழ்ச் சங்கங்களின் இளவலான தைவான் தமிழ்சங்கம் தன் அளப்பரிய செயல்களால் மற்ற தமிழ்சங்கங்களுக்கு முன்மாதிரியான பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது, விழுது தமிழ் பள்ளி; ஆராய்ச்சி மாணவர்களுக்கான விருது; முனைவர் பட்டம் பெரும் தமிழ் மாணவர்களுக்கு பட்டயம்; தைவான் தமிழ்சங்க உதவித்தொகை; தமிழ் பேச்சு திறன் வளர்க்கும் தமிழ் அமர்வு என நீண்டுகொண்டே செல்கிறது பணிகள்.
இதில் முத்தாய்பாக "அய்யன் வள்ளுவருக்கு சிலை" அதுவும் இரண்டு சிலைகள் தலைநகர் தைபேய்லும், கடல் நகர் ஹுவளியனிலும் நிறுவி தனது மைல்கல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தைவான் தமிழ்ச்சங்கத்தின் 8 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா தைவான் நாட்டின் தலைநகரான தைபேயில் உள்ள ஃபூ ஜென் பல்கலைக்கழகத்தின் உள்ளரங்கத்தில் கடந்த சனிக்கிழமை அன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தைவான் நாட்டு மக்களுடன், பல நாட்டு மக்களும் ஒருசேர சுமார் 450க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு விழாவை சிறப்புற கொண்டாடினர். தைவான் தமிழ்ச்சங்கம் தொடங்கி 7 ஆண்டுகள் முடிவடைந்து எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
தமிழ்த் தாய் வாழ்த்து
பொங்கல் விழாவின் தொடக்கமாக தைவான் தமிழ்ச்சங்கம் நடத்தும் 'விழுதுகள் தமிழ்ப் பள்ளி' தைபே மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் தைவான் தமிழ் சங்கத்தின் பொதுச்செயலாளர் முனைவர் ஆகு.பிரசண்ணன் வரவேற்று உரையாற்றினார். தைப்பொங்கல் விழாவின் சிறப்பு விருந்தினர்களான இந்திய தைபே அசோசியேசனின் (இந்திய-தைவான் தூதரகம்) இணை பொது இயக்குனர் ரிஷிகேஷ் சுவாமிநாதன், பூ ஜென் பல்கலைக்கழகத்தின் நிர்வாகி அருட்தந்தை ஜேம்ஸ், பேராசிரியர் ஆல்பர்ட் தாங் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர்.
3 நிமிட பேச்சு பேட்டி
மேலும் இவ்விழாவில் ஃபூ ஜென் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விவகாரத்துறை தலைவர், பேராசிரியை சென் மற்றும் அருட்தந்தை பாயர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினர். தைவான் வாழ் தமிழ் அன்பர்களின் பேச்சுத் திறனை மேம்படுத்தும் விதமாக, தைவான் தமிழ்ச்சங்கம் ஆண்டு தோறும் நடத்தும் 3 நிமிட பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரிஷிகேஷ் சான்றிதழுடன் கூடிய பரிசு பணமுடிப்பினையும் வழங்கி சிறப்பித்தார்.
ஆடை அலங்காரம்
தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இம்முறை ஆராய்ச்சி மாணவர் அச்சுதன் எழுதிய "குலுக்கை' என்ற கவிதை புத்தகம் ரிஷிகேஷ் சுவாமிநாதனால் வெளியிடப்பட்டது. மேலும் ஓவியப்போட்டியில் பங்கு கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு பேராசிரியை சென் பரிசுவழங்கி ஊக்கப்படுத்தினார். பொங்கல் விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, சிறார்களின் ஆடை-அலங்கார அணிவகுப்பு குறிப்பாக பாலமுருகன் வேடம் பூண்டு, காவடியுடன் வந்த குழந்தை அனைவரையும் ஈர்த்தது,
கலாசார கதம்ப திருவிழா
புல்லாங்குழல், இன்னிசை மேலும் இந்திய மற்றும் தைவான் நடனக்குழுவினரின் நடன நிகழ்சிகள் என்று இப்பொங்கல் விழா ஒரு கலாச்சார கதம்பத்திருவிழாவாக நடைபெற்றது. இப்பொங்கல் விழா தமிழ், ஆங்கிலம் மற்றும் சீன மொழி என்று மும்மொழிகளில் அனைவருக்கும் புரியும் வகையில் பிரியா பரஸ்வானி மற்றும் ராஜமோகன் ஆகியோரால் தொகுத்து வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட பார்வையாளர் சுமார் 450 பேருக்கு பொங்கலுடன் கூடிய அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. தைவான் தமிழ்ச்சங்க துணைத்தலைவர் இரமேசு பரமசிவம் மற்றும் துணைச் செயளாலர் பொன்முகுந்தன் விழாவை சிறப்புற ஒருங்கிணைத்தனர். தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் தில்லை நாயகம் அனைவருக்கும் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.