ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 40 ராணுவ வீரர்கள் பலி
காபூல்: ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் புறநகர்ப் பகுதியில் இன்று ராணுவ வீரர்கள் வந்த வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். வத்ராக் பகுதியில் இருந்து காபூல் நோக்கி வந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பேருந்தில் இருந்த 40 பேர் உயிரிழந்ததாகவும், இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றிருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் பற்றிய விவரங்களை சேகரித்து வருவதாக ஆப்கானிஸ்தானின் உள்துறை செய்தித் தொடர்பாளர் சேதிக் சித்திக்கி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து சர்வதேச படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு தலிபான்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் நேபாள பாதுகாவலர்கள் சென்ற பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.