ஷேவிங் செய்யவும் தாடியை டிரிம் செய்யவும் தடை.. மாறுவேடத்தில் கடைகளை கண்காணிக்கும் தலிபான்கள்
காபூல்: ஆப்கானிஸ்தானில் முடித்திருத்தம் செய்ய வருவோர்களுக்கு முகக் சவரம் (ஷேவிங்) செய்யக் கூடாது என ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடித்திருத்தும் கலைஞர்களுக்கு தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Recommended Video
மேலும் முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த தடையை மீறினால் தண்டனை வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்கள். அது போல் காபூலில் உள்ள முடிதிருத்தும் கலைஞர்களுக்கும் (பார்பர் ஷாப்) தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனால் மக்களிடையே அச்சம் எழுந்தது. எனினும் 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை தலிபான்கள் செய்த கடுமையான ஆட்சி இருக்காது என அவர்கள் தரப்பிலேயே தெரிவிக்கப்பட்டது.
பெண்களுக்கு எதற்கு மந்திரி பதவி... அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்கட்டும் - தலிபான்கள்
தலிபான்கள் அமல்
எனினும் தற்போது கடுமையான சட்டங்களை தலிபான்கள் அமல்படுத்தி வருகிறார்கள். பெண்கள் வேலைக்கு செல்லவும், கல்விக் கற்கவும் நாங்கள் எந்த தடையும் விதிக்க மாட்டோம் என தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறந்துவிட்டது போல் புதிய புதிய உத்தரவுகளை தலிபான்கள் பிறப்பித்து வருகிறார்கள். விளையாட்டிலும் அரசியலிலும் ஆப்கானிஸ்தான் பெண்கள் பங்கேற்க தடை விதித்தனர். அதுபோல் அவர்களுடைய அமைச்சரவை பட்டியலிலும் பெண்களுக்கு இடமில்லை.
ஆப்கானிஸ்தானில் பள்ளிகள்
ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் மாணவிகளும் ஆசிரியைகளும் வரக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளனர். அது போல் பெண்கள் விவகாரங்கள் துறை அமைச்சகத்திலிருந்தும் பெண்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த அமைச்சகத்தையும் மூடிவிட்டனர். இந்த நிலையில் காபூலில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் பணிக்கு வர தடை விதித்துள்ளனர்.
பெண்கள் செய்யக் கூடிய வேலை
பெண்கள் மட்டுமே செய்யக் கூடிய பணிகளுக்கு மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் முடிதிருத்தும் கலைஞர்களுக்கு முகச் சவரம் (ஷேவிங்) செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்கள். ஹெல்மாண்ட் மாகாணத்தில் முடிதிருத்தும் நிலையங்களுக்கு தலிபான்கள் சார்பில் சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைமுடி
அந்த அறிக்கையில், தலைமுடி மற்றும் தாடியை வெட்டும் போது முடி திருத்தம் செய்யும் கலைஞர்கள் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை பின்பற்ற வேண்டும். யாருக்கும் புகார் சொல்ல உரிமை இல்லை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது போல் அமெரிக்க ஸ்டைல்களை பின்பற்றுவதை நிறுத்த வேண்டும் என்றும் யாருக்கும் முகச் சவரமும் தாடியை டிரிம் செய்யவும் கூடாது என உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உத்தரவே இல்லை
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் நகரத்திலிருக்கும் முடிதிருத்தும் கலைஞர் ஒருவர் தமக்கு தலிபான்களிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. எனினும் வாடிக்கையாளர்கள் யாரும் முகச் சவரம் செய்வதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். முடிதிருத்தம் செய்வதற்கான கட்டணத்தை குறைத்தாலும் சிகை அலங்காரம் செய்யும் நோக்கில் தற்போது அவரிடம் யாரும் அதிகமாக வருவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாறு வேடத்தில் தலிபான்கள்
அது போல் காபூலிலும் முடிதிருத்தும் கலைஞர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். யாருக்கும் தாடியை டிரிம் செய்யக் கூடாது என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். எந்த கடைக்காரராவது விதிகளை மீறுகிறார்களா என்பதை ஆய்வு செய்ய தலிபான்களே பொதுமக்கள் தோற்றத்தில் வருவதாகவும் காபூல் கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.