ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கொடூரம்.. பொதுமக்கள் முன்னிலையில் பிணைக் கைதிகள் 12 பேர் சுட்டு படுகொலை
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாங்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த 12 பேரை சுட்டுப் படுகொலை செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள், அரசு படையினருடன் கடுமையாக சண்டையிட்டு பல நகரங்களை பிடித்து வருகின்றனர். மேலும், குண்டூஸ் நகரில் நெடுஞ்சாலைகளில் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தியும் வருகின்றனர். இந்நிலையில் தலிபான்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த 12 பேரை சுட்டுக் கொன்றதாக அதிர்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ராணுவ அதிகாரி குலாம் முகமது தஹிரி கூறுகையில், அந்தர் மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் 12 பிணை கைதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர். அதில் 7 போலீஸார், 3 பாதுகாப்பு படையினர், 2 உளவுத் துறை அதிகாரிகள் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் தலிபான் தீவிரவாதிகளால் சமீபத்தில் பிணை கைதிகளாக கடத்தப்பட்டவர்கள் என்று அவர் கூறினார்.
மேலும், இந்த சம்பவத்தை உள்ளூர் மக்களை நேரடியாக வந்து பார்க்குமாறு தலிபான்கள் நிர்ப்பந்தித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.