LinkedIn பயன்படுத்தும் மலாலாவை தாக்கிய வழக்கில் தேடப்படும் தீவிரவாதி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்சாயை தாக்கிய வழக்கில் தேடப்படும் மூத்த தாலிபான் தலைவர் லிங்கட்இன்னை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்சாயை தாக்கிய வழக்கில் தேடப்படுபவர் மூத்த தாலிபான் தலைவரான இஹ்சானுல்லா இஹ்சான். அவர் லிங்கட்இன்னில் கணக்கு வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. அவருக்கு லிங்கட்இன்னில் 69 பேருடன் தொடர்பு உள்ளது. தாலிபான் அமைப்பின் அங்கமான ஜமாத்துல் அஹ்ராரின் செய்தித் தொடர்பாளர் நான் என்று வெளிப்படையாக அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது திறமைகள் என்று ஜிஹாத் மற்றும் பத்திரிக்கை தொழில் செய்வது என்று தெரிவித்துள்ளார். லிங்கட்இன்னில் அவர் தனது பள்ளி, வேலை பார்த்த இடங்கள், தெரிந்த மொழிகள் ஆகியவற்றின் விவரங்களை அளித்து தனது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இஹ்சானின் லிங்கட்இன் கணக்கை பார்த்த இங்கிலாந்தைச் சேர்ந்த நாளிதழ் ஒன்று புகார் அளித்தது. அதன் பிறகு லிங்கட்இன் நிர்வாகம் இஹ்சானின் கணக்கை கடந்த வெள்ளிக்கிழமை இரவு முடக்கியது.
இஹ்சான் ட்விட்டரிலும் கணக்கு வைத்துள்ளார். ட்விட்டர் நிர்வாகம் அவரின் கணக்கை முடக்கியதும் அவர் வேறு கணக்கு துவங்கி அதை பயன்படுத்தி வருகிறார். மலாலாவை தாலிபான்கள் தான் தாக்கினர் என்று பொறுப்பேற்ற இஹ்சானை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.