தாலிபான்கள் அடாவடி.. போராட்டம் நடத்திய பெண்கள் மீது திடீரென பெப்பர் ஸ்ப்ரே.. என்ன காரணம் தெரியுமா
காபூல்: போராட்டம் நடத்திய பெண்கள் மீது தாலிபான்கள் பெப்பர் ஸ்பிரே வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் ஆப்கனில் உள்ள பயங்கரவாதிகள் மீது அமெரிக்கப் படைகள் போர் தொடுத்தது. அந்தச் சமயத்தில் தாலிபான்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டனர்.
அப்போது அமெரிக்க ஆதரவுடன் மக்கள் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. அங்கு அமெரிக்கா சுமார் 20 ஆண்டுகள் போர் தொடுத்த போதிலும் வெல்ல முடியவில்லை.

தாலிபான்கள்
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கனில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. அப்போது வரை அமைதியாக இருந்த தாலிபான்கள் அமெரிக்கா வெளியேறியதும் மீண்டும் ஆட்சியைப் பிடித்தனர். தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததுமே அனைவருக்கும் எழுந்த முதல் அச்சம் பெண்களின் உரிமை ஒடுக்குவதில் தாலின்பான்களின் நிலைப்பாடு தான். ஏனென்றால் கடந்த 1996-2001 ஆட்சியிலேயே பெண் உரிமையை ஒடுக்கும் வகையில் தாலிபான்கள் தொடர்ந்து செயல்பட்டனர்.

கட்டுப்பாடுகள்
இந்த முறை ஆட்சி அமைத்த சமயத்தில் பெண்களுக்கு அனைத்து உரிமையும் வழங்கப்படும் என்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியாக புதிய தாலிபான் 2.o ஆட்சி இருக்கும் என்றும் அந்த அமைப்பின் தலைவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அதன் பின்னர் தாலிபான்களின் செயல்பாடுகள் அதற்கு நேர்மாறாக இருந்து வருகிறது. முதலில் ஆண்- பெண் என இரு பாலார் சேர்ந்து படிக்கும் முறைக்குத் தாலிபான்கள் தடை விதித்தனர். அதன் பின்னர் ஆண் துணை இல்லாமல் பெண்கள் வெளியே செல்லக் கூடாது என உத்தரவிட்டனர்.

போராட்டம்
இப்படி தாலிபான்களின் தொடர் செயல்பாடுகளால் அங்குப் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் சுமார் 20 பெண்கள் காபூல் பல்கலைக்கழகத்தின் முன் சமத்துவம் மற்றும் நீதியை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். ஆப்கனில் பெண்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது அந்த இடத்திற்கு திடீரென தாலிபான் அமைப்பினர் வந்தனர்.

பெப்பர் ஸ்ப்ரே
அப்போது அங்குப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் எந்தவொரு முன்னெச்சரிக்கையும் கொடுக்காமல் திடீரென தாலிபான்கள் பெப்பர் ஸ்ப்ரேவை தெளித்துள்ளனர். இது தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கூறுகையில், "இதனால் எனது வலது கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது தாலிபான் வீரரிடம் இதைச் செய்ய உங்களுக்கு வெட்கமாக இல்லையா எனக் கேட்டேன். உடனே அந்த வீரர் என்னை நோக்கி துப்பாக்கியைக் காட்டினார்" என்று பதற்றத்துடன் கூறினார்.
Recommended Video

அடாவடி
தாலிபான்களின் இந்த அடாவடி செயலால் காயமடைந்த இரு பெண்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த போராட்டம் தொடர்பான செய்தியை சேகரிக்கச் சென்ற AFP செய்தி நிறுவனத்தின் நிருபரின் செல்போனையும் தாலிபான்கள் பறித்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபோல பெண்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலான செயல்களில் தாலிபான்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவது சமூக ஆர்வலர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications