தாலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் மரணம்.. புதிய தலைவராக ஹைபதுல்லா நியமனம்
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்து வந்த முல்லா அக்தர் மன்சூர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, புதிய தலைவராக முல்லா ஹைபதுல்லா அகுந்த்ஜடா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்து வந்தவர் முல்லா உமர். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த இயக்கத்தின் தலைவராக, அவரது உதவியாளராக இருந்த முல்லா அக்தர் மன்சூர் (வயது 48), கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முல்லா அக்தர் மன்சூர் பதவிக்கு வந்த பின்னர் ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகள் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் நடத்தி வந்தனர். அதில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களில் ஆப்கன் ராணுவ வீரர்களும் ஏராளமாக கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முல்லா அக்தர் மன்சூரை குறி வைத்து ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த திடீர் தாக்குதலில், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த முல்லா அக்தர் உயிரிழந்தார். மிகுந்த அரசியல் அழுத்தங்களுக்கு இடையே அவர் உயிரிழந்ததை தாலிபன் அமைப்பு ஒப்புக்கொண்டது.
தற்போது, புதிய தலைவராக முல்லா ஹைபதுல்லா அகுந்த்ஜடா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். தீவிர ஜிகாதி சிந்தனை கொண்டவரான முல்லா ஹைபதுல்லா, தலிபான் இயக்கத்தை புதிய எழுச்சிபெறச் செய்வார் என்றும், அந்த அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.