ஆப்கான் உள்துறை அமைச்சகம் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்- 15 பேர் பலி!!
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 4 வெளிநாட்டு ஆலோசகர்கள் உட்பட 15 பேர் பலியாகி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் காபூல் உள்ளிட்ட நகரங்கள் மீது தலிபான் தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் காபூர் விமான நிலையத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினர்.
அதற்கு முன்னதாக விமான நிலையம் மீதான தாக்குதலின் போது ஸ்பைஸ்ஜெட் விமானம் 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. ஆனால் விமானம் புறப்படாததால் அது தாக்குதலில் இருந்து தப்பியது.
இதனைத் தொடர்ந்து தற்போது ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் காபூலுக்கான சேவையை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் காபூலில் உள்துறை அமைச்சகம் மீது தலிபான் தீவிரவாதிகள் இன்று அதிரடியாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.
இதில் 4 வெளிநாட்டவர் உட்பட 15 பேர் உடல்சிதறி பலியாகினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.