அமெரிக்காவை அதிர வைத்த தலிபான்கள்.. அதி நவீன எப் 16 போர் விமானத்தை சுட்டதால் பரபரப்பு
காபூல்: அமெரிக்காவின் அதி நவீன போர் விமான எப் 16 விமானம் ஆப்கானிஸ்தானில் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. இது மிகவும் அரிதான செயலாகும் என்பதால் அமெரிக்கப் படையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மிகவும் அதி நவீனமான எப் 16 போர் விமானத்தை தாக்கும் அளவுக்கு தீவிரவாதிகள் கையில் ஆயுதம் புழங்குவது அமெரிக்காவை அதிர வைத்துள்ளது.
100 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஜெட் விமானத்தில் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், அதை தற்போது பழுது பார்க்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது அதன் எரிபொருள் டேங்க் முற்றிலும் சேதமடைந்துள்ளதாம்.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. கிழக்கு பக்தியா மாகாணத்தில், சயித் கரம் என்ற மாவட்டத்தில் இந்தத் தாக்குதலில் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பகுதி தலிபான்கள் வசம் உள்ளதாகும்.
இதுதொடர்பாக டிவிட்டரில் தீவிரவாதிகள் ஒரு செய்தியும் போட்டுள்ளனர். எதிரி விமானத்தை வீழ்த்தி விட்டதாக அதில் அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 2001 முதல் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டு தலிபான்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அது முதல் சிறிய ரக ஆயுதங்களை வைத்து சிறு சிறு ஹெலிகாப்டர்களை தீவிரவாதிகள் பலமுறை வீழ்த்தியுள்ளனர். ஆனால் மிகப் பெரிய போர் விமானத்தை அவர்கள் தொட்டிருப்பது அமெரிக்காவை அதிர வைத்துள்ளது.
இந்த போர் விமானமானது தரையிலிருந்து 50,000 அடி உயரம் வரை பறக்கக் கூடியதாகும். எனவே இந்த விமானத்தை தாக்கும் அளவுக்கு தலிபான்கள் வல்லமை பெற்றிருப்பது அமெரிக்காவை பீதிக்குள்ளாக்கியுள்ளது.