தமிழர் கலையை.. தமிழர் மரபை மீட்டெடுப்போம்.. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா
தமிழர் கலையை போற்றிடுவோம்.. தமிழர் மரபை மீட்டெடுப்போம் என்று கருப்பொருள் கொண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் சார்பில் தமிழ் விழா நடைபெறுகிறது.
மினியாபொலிஸ்: வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை சார்பில் இந்த ஆண்டு தமிழ் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழர் கலையைப் போற்றிடுவோம்.. தமிழர் மரபை மீட்டெடுப்போம் என்பதை கருப்பொருளாகக் கொண்டு இவ்விழா நடைபெற உள்ளது.
இதுகுறித்து, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் செயலாளர் இரமாமணி செயபாலன்,"அனைவருக்கும் பேரவையின் பொங்கல் திருநாள், தமிழ் மரபுத் திங்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். பூமிப்பந்தில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நமது தமிழ் மரபையும், பாரம்பரியத்தையும் ஏறுதழுவுதல் உள்பட கட்டிக் காப்பது தமிழராகிய நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும்.
அவ்வகையில் இவ்வாண்டு பேரவையின் தமிழ் விழா கருப்பொருள் "தமிழர் கலையைப் போற்றிடுவோம்.. தமிழர் மரபை மீட்டெடுப்போம்" என்பது சாலச்சிறந்த ஒன்றாகும் என்று கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளில் கலை, இலக்கியம் என பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன.
இவ்வாண்டு பேரவையின் தமிழ் விழா மினியாபொலிஸ் நகரத்தில் நடைபெறவுள்ளது. ஜுன் மாதம் 30ம் தேதி தொடங்கி ஜுலை மாதம் 3ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவிற்கு அனைத்து தமிழ்சங்கத் தலைவர் மற்றும் செயலர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ள இரமாமணி, இதர தமிழ்ச்சங்க உறுப்பினர் மற்றும் நண்பர்களிடம் இந்தத் விழா குறித்த தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.