"சிறிசேனாவே திரும்பிப்போ"... லண்டனில் எதிரொலித்த இலங்கைத் தமிழர்களின் குரல்! #GoBackMY3
லண்டன் சென்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிற்கு எதிராக புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
லண்டன் : காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா சென்றுள்ளார். சிறிசேனாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் "கோ பேக் மைத்ரிபால சிறிசேனா" என்ற போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க வலியுறுத்தி புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் போராட்டத்தின் போது வலியுறுத்தினர். ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகள் அனைத்தையும் இலங்கை நிறைவேற்றும் வரை காமன்வெல்த் நாடுகள் பட்டியலில் இருந்து அதனை நீக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இலங்கைத் தமிழர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யவும் அவர்களுக்கு அமைதியான வாழ்க்கைச் சூழலையும்,நிரந்தர அரசியல் தீர்வையும் ஐநா பார்வையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். மைத்திரிபால சிறிசேனாவை திரும்பிப் போகுமாறு முழக்கங்களை எழுப்பியவாறும், பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
"மைத்திரியே திரும்பிப் போ", "எங்களுக்கு வேண்டாம் அரசியலமைப்பு, தமிழீழமே இறுதித் தீர்வு" என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் ஏந்தி நின்றனர்.