சவுதி அரேபியாவில் தமிழக வாலிபருக்கு கொடுமை.. வாட்ஸ்அப் வீடியோவில் உருக்கம்! உதவுமா மத்திய அரசு?
ரியாத்: சவுதி அரேபியாவில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி வரும் தமிழக இளைஞர் தன்னை காக்க இந்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று வாட்ஸ்அப் மூலம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, மேலபூங்குடி போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் கலைவாணன். இவரது தந்தை பெயர் காசிநாதன், தாய் பெயர் கல்யாணி.
சுந்தரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் இவருக்கு உள்ளனர். வறுமையால் கஷ்டப்பட்ட கலைவாணனை, அவரது மைத்துனர் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு அழைத்துள்ளார்.
சவுதி அரேபியாவில் கார் டிரைவர் வேலைக்கு என நடைபெற்ற தேர்வில் பங்கேற்று கலைவாணன், சவுதிக்கு சென்றுள்ளார். இவருடன் பெரியப்பா மகன் மற்றும் அண்ணன் மகனும் சவுதிக்கு சென்றுள்ளனர்.
ரியாத் நகரில் இறங்கி பிறகு அவுராபாத் எனும் பகுதிக்கு இவர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு சென்ற பிறகுதான், டிரைவர் வேலைக்கு தாங்கள் அழைத்து வரப்படவில்லை என்பதும், ஆடு மேய்க்க அழைத்துவரப்பட்டதும் தெரியவந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த கலைவாணன், அடித்து, உதைத்து கட்டி வைக்கப்பட்டுள்ளார்.
இனி கலைவாணன் வார்த்தைகளிலேயே அந்த கொடுமைகளை நீங்களே வாசியுங்கள்: கார் டிரைவர் வேலைக்கு என்றுதான் சவுதிக்கு வந்தோம். விசாவிலும் அப்படித்தான் உள்ளது. ஆடு மேய்க்க முடியாது என கூறியதும், ஓனர் அப்துல்லா என்னை அடித்து சங்கிலியில் கட்டி வைத்தார்.
3 நாட்களாக சோறு தண்ணீ தரவில்லை. பசி தாங்க முடியாமல் கெஞ்சிய பிறகு, கூல்ட்ரிங்சும், பன்னும் கொடுத்தனர். பிறகு அப்துல்லா அவரது பெரியப்பா வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இது, குவைத் சாலையில் 25வது கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடமாகும். 3 மாதமாக அங்குதான் வேலை பார்க்கிறேன்.
சாப்பாடு சரியாக தருவதில்லை, உடலில் தெும்பும் இல்லை. ஒரு ஆட்டுக்குட்டி செத்துப்போய்விட்டது என்பதற்காக இரும்பு கம்பியால் எனது கழுத்தை நெரித்து கொல்லப்பார்த்தனர். அந்த வடு கூட அப்படியே உள்ளது. இன்னும் கொஞ்ச நாளில் என்னை கொன்றுவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது.
எனக்கு எனது மனைவி, பிள்ளைகளை பார்க்க ஆசையாக இருக்கிறது. தயவு செய்து தமிழர்கள் யாராவது இதை தமிழ்நாடு முதலமைச்சர் அல்லது பிரதமர் கவனத்திற்கு கொண்டு சென்று என்னை காப்பாற்றுங்கள். உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். இவ்வாறு நா தழுதழுக்க கூறுகிறார் கலைவாணன்.
இவரது பாஸ்போர்ட் நம்பர் 'கே.2726490' என்ற தகவலையும், வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து இந்த தமிழரை காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்புமாகும்.