அமெரிக்காவில் முழங்கிய தமிழனின் பறை இசை!
செயின்ட் லூயிஸ்(யு.எஸ்). அமெரிக்காவின் முக்கிய நகரங்களின் ஒன்றான செயின்ட் லூயிஸில் வசிக்கும் தமிழ் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து தமிழர்களின் புராதன அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு அங்கமாக, முதலில் பறை இசையின் மறுமலர்ச்சிக்கு வித்துட்டுள்ளனர்.
திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினர்
தமிழகத்தில் மிகவும் பிரபலமான திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினர் பறை இசையால் ஈர்க்கப்பட்ட இந்த தமிழர்கள், அமெரிக்காவிற்கும் பறை இசையை கொண்டு வரவேண்டும் என்று விரும்பினர். சக்தி கலைக் குழுவினரிடம் தொடர்பு கொண்டு, அவர்கள் மூலமாகவே பறை இசைக் கருவிகளை முதலில் தருவித்தனர். வீடியோவிலும், ஆடியோவிலும் கேட்டு சுயமாகவே பயிற்சி செய்ய ஆரம்பித்தனர்.
பயிற்சி ஆசிரியையாக டெக்சாஸ் பள்ளி மாணவி
டெக்சாஸில் உயிர் நிலைப் பள்ளி யில் படித்து வரும் தமிழ் மாணவி ரோஷிணி, ஏற்கனவே சக்தி கலைக்குழுவினரிடம் நேரடியாக பயிற்சி பெற்று வந்திருப்பது தெரிய வந்தது. அவரையே தங்கள் ஆசிரியையாக ஏற்றுக்கொண்டு முழுமையான பயிற்சி எடுத்தனர்.
கான்சாஸ் – செயின்ட் லூயிஸ்
முதல் நிகழ்ச்சியாக கான்சாஸ் நகர தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 'கலகலப்பு 2013' கலை நிகழ்ச்சியில் பங்கேற்று, நடனத்துடன் கூடிய பறை இசை நிகழ்ச்சி நடத்தினர். கம்ப்யூட்டர் வல்லுனர்கள் பறை நடனம் ஆடிய நிகழ்ச்சி கான்சாஸ் நகரத்தையே வியப்பில் ஆழ்த்திவிட்டது. தொடர்ந்து செயின்ட் லூயிஸ் மிசௌரி தமிழ் சங்கத்தின் முத்தமிழ் விழாவிலும் இந்த குழுவினர் பறை நிகழ்ச்சி நடத்தி அசத்தி விட்டனர்.
2014 பொங்கல் விழா
அமெரிக்காவிலும் தமிழர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வரும் பொங்கல் விழாவிலும் பறை நிகழ்ச்சி இடம்பெறுகிறது. சிகாகோ தமிழ் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
ஃபெட்னா 2014 தமிழ் விழா
ஜூலை மாதம் செயின்ட் லூயிஸில் நடைபெற உள்ள ஃபெட்னாவின் 2014 தமிழ் விழாவிலும் பறை இசைக் குழுவின் நிகழ்ச்சி இடம்பெறுகிறது. அமெரிக்க பல்கலைகழங்களுடன் இணைந்து தமிழ் மொழியியல் இசையாக பதிவு செய்யும் முயற்சியிலும் உள்ளார்கள். ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு நகரத்தில் தமிழ் அமைப்புகளின் சார்பில் நடனத்துடன் பறை இசை எழுப்பி தமிழர்களின் பண்டைய பாரம்பரியத்தை புதுப்பித்து வருகிறார்கள் இந்த செயின்ட் லூயிஸ் தமிழ் ஆர்வலர்கள்.
பறை இசை முழக்கும் கணிப்பொறியாளர்கள்
இந்த குழுவில் இடம்பெற்றுள்ள பொற்செழியன், புவனேஸ்வரி, நந்தகுமார், செந்தில் நாயகி, வீணா, அசோக், ரம்யா, யசோதா மற்றும் பிரிதிவிராஜ் ஆகிய அனைவருமே கம்ப்யூட்டர் துறையில் வல்லுனர்கள் ஆவார்கள். தமிழ் ஆர்வத்தினால் தமிழர்களின் பாரம்பரிய கலையை அடுத்த தலைமுறை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தவும், அமெரிக்கர்களுக்கு தமிழர்களின் தொன்மையை எடுத்துரைக்கவும் இந்த அரிய முயற்சியில் பங்கெடுத்து வருகிறார்கள். தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கிடைக்கும் நன்கொடைத் தொகையை முழுமையாக, தமிழகத்தில் உள்ள பறை இசைக் கலைஞர்களின் நலனுக்காக அனுப்பி விடுகிறார்கள்.
தொடர்புக்கு...
வருங்கால சந்ததியினரும் இந்த கலையை தொடரவேண்டும் என்ற முயற்சியோடு செயல்பட்டு வருகிறார்கள், அமெரிக்கா முழுவதும் நிகழ்ச்சி நடத்தி வரும் இந்த குழுவை [email protected] மற்றும் [email protected] என்ற இமெயில் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.
'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்று அன்று பாவேந்தர் புரட்சி ஏற்படுத்தினார். இன்று பறை இசை மூலம் அமெரிக்கத் தமிழர்கள் ஒரு அமைதிப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றால் மிகையல்ல.