டெக்சாஸ் பல்கலை. தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் முகாம்: ப்ளேனோ தமிழ்ப் பள்ளி பங்கேற்பு
dallas, texas university, tamil scholls, டல்லாஸ், தமிழ்ப் பள்ளிகள், டெக்சாஸ் பல்கலைக் கழகம்
டல்லாஸ்(யு.எஸ்): யுனிவர்சிட்டி ஆஃப் டெக்சாஸ், ஆஸ்டின் சார்பில் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. யுனிவர்சிட்டி ஆஃப் டெக்சாஸ், டல்லாஸ் வளாகத்தில் பேராசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சங்கரன், ஆசிரியர்களுக்கான இந்த பயிற்சி வகுப்பை நடத்தினார்.
டல்லாஸில் 16 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் ப்ளேனோ தமிழ்ப் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த சிறப்பு பயிற்சி முகாமில், டாக்டர் ராதாகிருஷ்ணன் மாணவர்களுக்கு எளிய முறையில் எவ்வாறு தமிழ் கற்றுத் தருவது என்று விவரித்தார்.
அமெரிக்காவில் பிறக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கு, தமிழ் இரண்டாவது மொழி தான் என்ற உண்மையை முதலில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஸ்பானிஷ், ஃப்ரெஞ்ச் போன்ற மொழிகள் போல் தமிழை இரண்டாவது மொழியாக பாவித்து கற்றுத் தரவேண்டும்.
பள்ளியிலும் வெளியிலும் அன்றாடம் பயன்பாட்டில் ஆங்கிலம் இருப்பதால் அது முதல் மொழியாக பாவிக்கப் டவேண்டும் இரண்டாவது மொழி என்பதால் தமிழுக்கு முக்கியத்தும் குறைவு என்று அர்த்தம் அல்ல.
அமெரிக்கத் தமிழ் மாணவர்கள் தமிழில் புலமை பெறும் அளவுக்கு, நாம் கற்பித்து தர முடியும். அவர்களுக்கு எளிதில் புரிந்து கொண்டு, நினைவில் நிறுத்திக்கொள்ளும் பயிற்சி முறைகளைக் கையாள வேண்டும் என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
மாணவர்கள் எத்தனை கேள்விகள் கேட்டாலும், ஆசிரியர்கள் சளைக்காமல் பதில் சொல்லவேண்டும். கேள்விகள் நிறைய வந்தால், மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
தமிழ் உச்சரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழ் எழுத்துக்களின் ஒலி மாணவர்களுக்கு அதிகம் கேட்குமாறு செய்யவேண்டும்.
பாடப் புத்தகம் எழுதுபவர்கள், குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கு எளிமையாக இருக்கும் வகையில் தயாரிக்க வேண்டும் என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
இந்த பயிற்சி முகாமில் 40 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ஊதியம் இல்லாமல் தன்னார்த்துவடன் பணியாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
வேலு ராமன் அனைவரையும் வரவேற்று பயிற்சி முகாமின் நோக்கத்தை எடுத்ததுரைத்தார். ப்ளேனோ தமிழ்ப் பள்ளி தாளாளர் விசாலாட்சி வேலு டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். பள்ளிச் செயலாளர் ஸ்ரீராம் கிருஷ்ணன் நன்றியுரை ஆற்றினார்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி சான்றிதழை டாக்டர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
அமெரிக்காவில் தமிழ்க் கல்வி அடுத்த நிலைக்கு செல்வதற்கு இது போன்ற பயிற்சி முகாம்கள் உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
- இர தினகர்