மலேசியாவில் தத்தளிக்கும் 200 இந்திய மாணவர்கள் = அழைத்துவர சிறப்பு விமானம் ஏற்பாடு
மணிலா: பிலிப்பைன்ஸில் இருந்து புறப்பட்டு தாயகம் திரும்ப முடியாமல் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் தவித்த இந்திய மாணவர்கள் 200 பேரை அழைத்து வர சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் எல்லாருடைய நிம்மதியையும் கெடுத்து வருகிறது. உள்ளூர், வெளிமாநிலவாசிகளை பாடாய்படுத்தி வருகிறது. இதனால் பெரும்பாலானோர் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவைகளுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாடுகளில் படிப்பதற்காகவும் வேலைநிமித்தமாகவும் சென்றுள்ளவர்களால் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அனுமதி
ஏற்கெனவே சீனா, ஜப்பான் கப்பலில் இருந்த இந்தியர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டெடுத்தது. இந்த நிலையில் பிலிப்பைன்ஸில் இந்தியாவை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகிறார்கள். கொரோனா பரவுவதை தடுக்க அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
தண்ணீர்
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க சென்றாலும் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்ற கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு அறையில் 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். அதில் ஒருவரால் மற்ற அனைவருக்கும் உணவு, மருந்து, தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை எப்படி வாங்கி வர முடியும். வாங்குவது சரி எப்படி சுமந்து வருவது.
பூர்த்தி
உணவு உள்ளிட்ட பொருட்களும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கிடைக்கிறது. அந்த நேரத்தில் கால் டேக்ஸிகளும் கிடைக்காத சூழல் நிலவுகிறது. இதனால் உணவு தேவையை கூட பூர்த்தி செய்துக் கொள்ள முடியாத சூழலில் உள்ளனர்.
அரசு மீட்க வேண்டும்
இந்த நிலையில் சொந்த நாடுகளுக்கு திரும்பலாம் என்றாலும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 100 பேர் உள்பட 200-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப விமானத்தில் வந்தனர். இதனிடையே சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து அவர்களது விமானம் மலேசியாவில் தரையிறங்கியது. தற்போது தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். தங்களை இந்திய அரசும், மாநில அரசுகளும் மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விமானம் ஏற்பாடு
இந்த நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் தத்தளிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நட வடிக்கை மேற்கொண்டு வருகிறது. 200 பேரையும் மீட்டு வருவதற்காக சிறப்பு விமானத்தை அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.