மதுரை எம்பிக்கு நெருக்கம்.. ஜஸ்டின் ட்ரூடோவின் நண்பர்.. கனடா தேர்தலில் வென்று கலக்கிய தமிழர்!
கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்டு தமிழர் ஒருவர் வென்றுள்ளார்.
Recommended Video
ஓட்டவா: கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்டு தமிழர் ஒருவர் வென்றுள்ளார்.
கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா லிபரல் கட்சி வெற்றிபெறும் நிலையில் உள்ளது. கனடா நாடாளுமன்றத்தில் மொத்தம் 338 இடங்கள் உள்ளது. மெஜாரிட்டிக்கு 170 இடங்கள் தேவை. இதில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 105 இடங்களில் வென்று முன்னிலை வகிக்கிறது.
ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 146 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இடதுசாரிகள், ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்து மைனாரிட்டி ஆட்சியை அமைப்பார்கள்.
சர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது? மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி!
தமிழர் வெற்றி
இந்த தேர்தலில் தமிழர் ஒருவர் வெற்றிபெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சியை சேர்ந்த கேரி ஆனந்தசங்கரி எனப்படும் சத்தியசங்கரி ஆனந்தசங்கரி வெற்றிபெற்றுள்ளார். இவர் டொரண்டோவில் உள்ள ஸ்கார்பாரோ - ரூஜ் பார்க் தொகுதியில் வென்றுள்ளார்.
யார் இவர்
இவர் இலங்கையை சேர்ந்த தமிழர். 1980ல் இவர் தன் அம்மாவுடன் இலங்கையை விட்டு வெளியேறி அயர்லாந்தில் குடியேறினார். அதன்பின் 1983ல் இவர் கனடாவில் குடியேறினார். கனடாவின் கார்லேடான் பல்கலைக்கழகத்தில் இவர் பிஏ அரசியல் படித்திருக்கிறார். ஹரிணி சிவலிங்கம் என்ற தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
என்ன பணிகள்
அதன்பின் 2005ல் இவர் சட்டம் பயின்று வழக்கறிஞராகி உள்ளார். பல்வேறு குடியுரிமை சார்ந்த வழக்குகளில் இவர் ஆஜராகி உள்ளார். அகதிகள் அமைப்புகள் பலவற்றில் இவர் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். மனித உரிமை தொடர்பான அமைப்புகள் பலவற்றில் இவர் பெரிய பொறுப்புகளை வகித்து வருகிறார். மனித உரிமை மீறல் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இலங்கை போர்
இலங்கை போரில் தமிழர்கள் அனுபவித்த இன்னல்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியதில் இவரின் பங்கும் அளப்பரியது. அங்கு நடந்த மனித உரிமை மீறல்களை இவர் உலகிற்கு எடுத்துக்காட்டினார். இதன் மூலம் கனடாவில் இவர் கவனம் பெற்றார். இது தொடர்பான விவாதங்கள் ஐநாவில் கூட எழுப்பப்பட்டது.
நண்பர்
சிலமுறை இவர் தமிழகம் வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிபிஐஎம் கட்சியின் மதுரை தொகுதி எம்பி சு. வெங்கடேசனுக்கு இவர் நெருங்கிய நபர். கீழடி தொடர்பான சில கூட்டங்களில் இவர் கலந்து கொண்டு இருக்கிறார். அதேபோல் ஜஸ்டின் ட்ருடோவிற்கு மிகவும் நெருக்கமான எம்பி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழர் என்பதும் ஜஸ்டின் ட்ருடோவின் அன்பிற்கு காரணம் என்கிறார்கள்.
மீண்டும் வெற்றி
இந்த நிலையில் கேரி ஆனந்தசங்கரி டொரண்டோவில் உள்ள ஸ்கார்பாரோ - ரூஜ் பார்க் தொகுதியில் வென்றுள்ளார். இவர் இதே தொகுதியில் 2015ல் வென்றார். தற்போது மீண்டும் 60% க்கும் கூடுதலான வாக்குகளை பெற்று அதே தொகுதியில் கெத்தாக வென்றுள்ளார்!