ராஜபக்சேவே! மலேசியாவை விட்டு வெளியேறு- கோலாலம்பூரில் கொந்தளித்த தமிழர்கள் #rajapaksa
கோலாலம்பூர்: மலேசியாவில் முகாமிட்டுள்ள இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே அந்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி கோலாலம்பூரில் 100க்கும் அதிகமான தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வர்த்தக மையக் கட்டத்தில் ஆசிய அரசியல் கட்சிகளின் 9-வது அனைத்துலக மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மலேசியா சென்றுள்ளார்.
புத்ரா உலக வர்த்தக மையத்தில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க மகிந்த ராஜபக்சே சென்றார். அப்போது பல்வேறு தமிழ் அமைப்புகளையும் சேர்ந்த 100க்கும் அதிகமானோர் மகிந்த ராஜபக்சவே மலேசியாவை விட்டு வெளியேறு என்ற முழக்கங்களுடன் போராட்டத்தில் நடத்தினர்.
ராஜபக்சேவுக்கு தரப்படும் அரசு மரியாதைகளை நிறுத்தி விட்டு அவரை வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இலங்கையில் பல்லாயிரம் தமிழர்களை படுகொலை செய்த போர்க்குற்றவாளி ராஜபக்சவே திரும்பி போ! எனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
மகிந்த ராஜபக்சே தங்கியுள்ல ஹோட்டல் மீதும் தாக்குதல் நடத்துவோம் என கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், புத்ரா உலக வர்த்தக மையத்துக்குள் நுழையவும் முயன்றனர்.
ஆனால் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே மகிந்த ராஜபக்சேவின் உருவபொம்மையும் மலேசியாவில் சில இடங்களில் எரிக்கப்பட்டன.