துபாய் மன்னர் குடும்பம் வேட்டையாட 40,000 பேரை வெளியேற்றும் தான்சானியா அரசு
தொடோமா: துபாயைச் சேர்ந்த ராஜ குடும்பத்தினர் விலங்குகளை வேட்டையாட தான்சானியாவில் 40 ஆயிரம் மசாய் சமூக மக்கள் தாங்கள் இத்தனை ஆண்டுகளாக வசித்து வந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட உள்ளனர்.
தான்சானியாவில் கென்யா எல்லையையொட்டி உள்ள செரங்கெட்டி தேசிய பூங்காவை அடுத்து உள்ள லோலியண்டோவில் இருக்கும் 1,500 சதுர கிலோமீட்டர் இடத்தை துபாய் ராஜ குடும்பத்தார் வேட்டையாட பயன்படுத்த அதை வாங்கியுள்ளனர். அவர்கள் சார்பில் ஆர்டெலோ பிசினஸ் கார்பரேஷன் நிறுவனம் அந்த இடத்தை வாங்கியுள்ளது. முதலில் இந்த நில பேரத்தை எதிர்த்த தான்சானியா அரசு பிறகு சம்மதித்துவிட்டது.
இதையடுத்து ராஜ குடும்பத்தார் வேட்டையாட வசதியாக அந்த இடத்தில் இத்தனை காலமாக வாழ்ந்து வரும் மசாய் சமூக மக்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மசாய் மக்கள் இந்த பகுதியில் தங்கிக் கொண்டு தங்களின் கால்நடைகளுக்கு அதை மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது 40 ஆயிரம் மசாய் மக்கள் தாங்கள் வாழ்ந்து வரும் இடத்தை காலி செய்ய வேண்டும். இதை எதிர்த்து மசாய் சமூக பிரதிநிதிகள் தான்சானியா பிரதமர் மிசெங்கோ பிண்டாவை சந்தித்து புகார் தெரிவிக்க உள்ளனர்.
மசாய் மக்கள் அந்த இடத்தை காலி செய்ய ரூ. 3 கோடியே 57 லட்சத்து 34 ஆயிரத்து 189 நிவாரணம் அளிக்க அரசு முன்வந்துள்ளது. ஆனால் அதை ஏற்க மசாய் மக்கள் மறுத்துவிட்டனர்.
மறுப்பு:
ராஜ குடும்பத்தினர் வேட்டையாட நிலத்தை பயன்படுத்துவதற்காக மசாய் மக்களை அவர்கள் வசித்து வரும் நிலத்தை விட்டு வெளியேற்றும் திட்டம் இல்லை என்றும், இது குறித்து அடுத்த மாதம் அவர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தான்சானியா இயற்கை வளம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் லசாரோ ந்யாலாண்டு தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லோலியாண்டேவில் வேட்டையாடும் பார்க் கொண்டு வரும் திட்டத்தை அரசு கைவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.