பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு மார்பகப் புற்றுநோய்
வாஷிங்டன்: பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கதேசத்தை சேர்ந்தவர் தஸ்லிமா நஸ்ரின் (வயது 51). இவர் எழுதிய லஜ்ஜா நாவல் கடும் சர்ச்சையில் சிக்கியதை தொடர்ந்து, வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தஸ்லிமா வசித்து வந்தார்.
அமெரிக்காவில் சிகிச்சை
இந்த நிலையில் கோடை விடுமுறைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.அங்கு கடுமையான சளி மற்றும் இருமலால் அவதிப்பட்ட அவர் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக சென்றார்.
மார்பகத்தில் கட்டி
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருடைய மார்பு பகுதியில் பெரிய கட்டி ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர். உடனே அவருக்கு பயாப்ஸி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு இன்று கிடைக்கும் என தெரிகிறது.
குடும்பமே பாதிப்பு
தஸ்லிமாவின் தாய் ஏற்கனவே புற்றுநோயால் மரணமடைந்துள்ளார். தஸ்லிமாவின் சகோதரர் ஒருவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் தஸ்லிமாவிற்கும் புற்றுநோய் பாதிப்பு இருப்பது அவருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூனையை பிரிய மனமில்லை
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ள தஸ்லிமா, பிரியமுள்ள இந்தியர்களே, எனக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால், இதனால் நான் இறந்தால், தயவு செய்து எனது பூனை மினுவை பார்த்துக் கொள்ளுங்கள். உலகிலேயே மிகச்சிறந்த பூனை அது என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.