அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகளை காப்பாற்றிய தமிழக துணிச்சல் ஆசிரியை!
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது தனது வகுப்பில் இருந்த மாணவர்களை தமிழக ஆசிரியை சாமர்த்தியமாக காப்பாற்றியுள்ளார்.
Recommended Video
வாஷிங்டன் : அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது தனது வகுப்பில் இருந்த மாணவர்களை தமிழகத்தை சேர்ந்த ஆசிரியை சாந்தி விஸ்வநாதன் சாமர்த்தியமாக காப்பாற்றியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவன் அவருடைய வகுப்பை கடந்து செல்வதை அறிந்து கதவு, ஜன்னல்களை சாத்தி மாணவர்களை காப்பாற்றியுள்ளார் துணிச்சல் மிக்க சாந்தி.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் பார்க்லேண்டில் உள்ள மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ் பள்ளியில் காதலர் தினத்தன்று இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இளைஞர் பள்ளிக்குள் நுழைந்து நடத்திய கொலைவெறி தாக்குதலில் மாணவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரை போலீசார் கைதுசெய்துள்ளனர். என்ன காரணத்திற்காக இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்று இதுவரை தெரியவில்லை.
இதனிடையே இந்த துப்பாக்கிச் சூட்டின் போது பள்ளியின் இரண்டாம் வகுப்பில் இருந்த மாணவர்கள் அனைவரும் அங்கு பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த கணித ஆசிரியரால் காப்பாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சாந்தி விஸ்வநாதன் என்ற அந்த பெண் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
விபரீதத்தை உணர்ந்த ஆசிரியை
சம்பவம் நடந்த அன்று வழக்கம் போல தனது வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார் சாந்தி. திடீரென பள்ளியில் அலாரம் தொடர்ந்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் விபரீதம் ஏதோ நடப்பதை உணர்ந்துள்ளார் சாந்தி.
சாமர்த்தியமான செயல்பாடு
உடனடியாக வகுப்பறையின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு மாணவர்களை மேஜை மற்றும் நாற்காலிகளுக்கு அடியில் படுக்க வைத்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவன் அந்த வகுப்பறையை கடந்து சென்றுள்ளான், ஆனால் வகுப்பறை மூடி இருந்ததால் அங்கு யாரும் இல்லை என்று கடந்து சென்றுள்ளான்.
போலீசாரிடமும் தைரியமாக பேச்சு
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் கதவைத் தட்டியுள்ளனர். எனினும் கொலைகாரன் தான் கதவை தட்டுவதாக எண்ணி கதவை திறக்க மறுத்துள்ளார் சாந்தி.
பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி
கதவை உடைத்துக்கொண்டு வா அல்லது சாவி கொண்டு திறந்து கொள் ஆனால் நான் கதவைத் திறக்க மாட்டேன் என்று கூறி இருக்கிறார் சாந்தி. இதன் பின்னர் காவல்துறையினர் ஜன்னலை உடைத்து உண்மையை சொன்ன பின்னர் குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தமிழகத்தை சேர்ந்த ஆசிரியரால் தங்களது குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக பெற்றோர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.