வாயா ராசா, எங்க ஆபீஸுக்கு வா: சிறுவன் அகமதுவுக்கு கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் அழைப்பு
டெக்சாஸ்: அமெரிக்காவில் கடிகாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட 9ம் வகுப்பு மாணவன் அகமது முகமதுவுக்கு கூகுள், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள இர்விங்கில் இருக்கும் மெக்ஆர்தர் உயர் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருபவர் அகமது முகமது(14). அவர் கடிகாரம் ஒன்றை செய்து பள்ளிக்கு எடுத்துச் சென்றார். கடிகாரத்தை பார்த்த ஆசிரியை அது வெடிகுண்டு என நினைத்து போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் வந்து அகமதை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அகமது மீது எந்த குற்றமும் இல்லை என்பதை அறிந்து அவரை விடுவித்தனர். இதற்கிடையே அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் ஆகியோர் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் சிறுவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தங்கள் தலைமை அலுவலகத்திற்கு வருமாறு கூகுள், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் அகமதுவுக்கு அழைப்பு விடுத்துள்ளன. மார்க் ஜக்கர்பர்க் தான் அகமதை தனது தலைமை அலுவலகத்திற்கு வருமாறு முதலில் அழைத்தார்.
இதையடுத்து கூகுள் இந்த வார இறுதியில் தங்கள் நிறுவனம் நடத்தும் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு அகமதை கேட்டுக் கொண்டுள்ளது. ட்விட்டர் நிறுவனமோ அகமதை தங்கள் அலுவலகத்தில் இன்டர்ன்ஷிப் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.