என்னைத் தீவிரவாதி என்று கருதி விட்டார்களே: சார்லி தாக்குதலில் சரணடைந்த மாணவர் வேதனை
பாரீஸ்: சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக தாக்குதல் வழக்கில் சரண் அடைந்த 18 வயது மாணவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்த 2 பேர் 12 பேரை சுட்டுக் கொன்றனர். இது குறித்து சமூக வலைதளங்களில் தனது பெயர் அடிபட்டதால் 18 வயது பள்ளி மாணவரான மவ்ராத் ஹமீது போலீசில் சரண் அடைந்தார்.
12 பேரை சுட்டுக் கொன்ற குவாச்சி சகோதரர்களில் ஒருவரின் மைத்துனர் தான் ஹமீது. குவாச்சி சகோதரர்களை சுட்டுக் கொன்ற போலீசார் ஹமீது குற்றமற்றவர் என்பதை தெரிந்து கொண்டு அவரை கடந்த வெள்ளிக்கிழமை மாலை விடுதலை செய்தனர்.
இந்நிலையில் இது குறித்து ஹமீது கூறுகையில்,
நடந்ததை எல்லாம் நினைத்து நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் பெற்றோருடன் வசிக்கும் ஒரு சாதாரண மாணவன். இருப்பினும் மக்கள் என்னை பற்றி சமூக வலைதளங்களில் பொய்யானவற்றை தெரிவித்தனர். ஆனால் போலீசார் என்னை சரியாக புரிந்து கொண்டு விடுவித்தனர். இந்த சம்பவத்தால் என் எதிர்காலம் பாதிக்காது என்று நம்புகிறேன் என்றார்.
சார்லி ஹெப்டோ அலுவலகம் தாக்கப்பட்டபோது ஹமீது பள்ளியில் இருந்துள்ளார். இந்த தாக்குதல் வழக்கில் எப்படி ஹமீதின் பெயர் அடிபட்டது என்று தெரியாமல் உள்ளது.