நாங்கள் பத்திரமாக உள்ளோம்... ஈராக்கில் சிக்கியுள்ள தமிழக நர்சுகள் போனில் தகவல்
தூத்துக்குடி: ஈராக்கில் தாங்கள் பத்திரமாக உள்ளதாக தமிழக நர்சுகள் சிலர் தங்களது குடும்பத்தினருக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே உருவான மதக்கலவரம் தற்போது உள்நாட்டு போராக மாறியுள்ளது. ஷியா அரசுக்கு எதிராக சதாம் ஆதரவுப் படையான சன்னி பிரிவினரின் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே அவர்கள் மொசூல், கிர்குக், திக்ரித், சாதியா, ரமாடி சமர்ரா, ஜலாலா உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றி தங்கள் பிடியில் வைத்துள்ளனர். தலைநகர் பாக்தாத்தை கைப்பற்றுவதில் தீவிர முனைப்பாக உள்ளனர்.
இந்நிலையில், ஈராக் மருத்துவமனைகளில் பணி புரியும் இந்திய நர்சுகள் பலர் இந்த உள்நாட்டுப் போரால் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள திக்ரித் நகரில் 46 இந்திய பெண் நர்சுகள் மருத்துவமனைக்குள் சிக்கியுள்ளனர். இந்திய நர்சுகளைப் பத்திரமாக மீட்டுத் தரும்படி, அவர்களது குடும்பத்தார் அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார் ஈராக்கில் உள்ள கேரள நர்ஸ் ஒருவர். அப்போது, தாங்கள் பிணைக்கைதிகள் போன்று மருத்துவமனை வளாகத்திற்குள் சிக்கியுள்ளதாகவும், விரைந்து தங்களை மீட்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், தற்போது தமிழக நர்சுகள் சிலர் தங்களது குடும்பத்தினரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இது அவர்களது குடும்பத்தாருக்கு சிறிது ஆறுதலாக அமைந்துள்ளது.
குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு பேசிய பத்து தமிழக நர்சுகளில் ஒன்பது பேர் நீலகிரியைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், போனில் அவர்கள், ‘நாங்கள் கடத்தப்பட்டு தனியாக ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளோம். மற்றவர்கள் வந்துவிடாதபடி கடத்தல்காரர்கள் சாலைகளை பிளாக் செய்து வைத்துள்ளனர். மேலும் எங்களோடு தூதரக அதிகாரிகள் உள்ளனர். நாங்கள் நலமாக இருக்கிறோம். எங்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உட்பட வசதிகள் ரெட் கிராஸ் அமைப்பு மூலம் தரப்படுகிறது. கவலைப்பட வேண்டாம். சீக்கிரம் விடுவிப்பார்கள் என்று நம்புகிறோம்' என குடும்பத்தாரிடம் கூறியுள்ளனர்.