எகிப்து மசூதியில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்.. தொழுகைக்கு வந்த 235 பேர் பலி
எகிப்தில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 235 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாய் : எகிப்தில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 235 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எகிப்தின் சீனாய் தீபகற்பத்தில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது.
எகிப்தின் சீனாய் தீபகற்பத்தில் உள்ள மசூதி ஒன்றில் இன்று மாலை திடீர் என்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. மசூதியில் தொழுகை முடித்துவிட்டு மக்கள் திரும்பும் போது இந்த கொடூர தாக்குதல் நிகழ்ந்து இருக்கிறது.
கையில் பெரிய துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் கண்முடித்தனமாக தாக்குதல் நடத்தினர். மேலும் கையெறி குண்டுகளை அந்த மசூதிக்குள் வீசியுள்ளனர்.
இந்த கொடூரமான தாக்குதலில் 235 பேர் மரணம் அடைந்துள்ளனர். 120 பேர் காயம் அடைந்துள்ளனர். மரணம் அடைந்த 185 பேரில் 40 பேர் போலீஸ்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலில் பெரும்பாலும் 'சுஃபி' வாழ்க்கை முறையை பின்பற்றும் மக்கள் குறிவைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த தாக்குதலை நடத்தியது எகிப்தில் இருக்கும் 'சீனாய் கிளர்ச்சி இயக்கம்' என்ற தீவிரவாத இயக்கமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இதில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் எகிப்த் அதிபர் முகமது மோர்சி பதவி விலகிய நாளில் இருந்து அங்கு தீவிரவாத தாக்குதல்கள் அதிகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.