தடுப்பை உடைத்து சீறிய கார்.. இங்கிலாந்து நாடாளுமன்றம் மீது தீவிரவாத தாக்குதல் முயற்சி?
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் வெளிப்புற தடுப்புகளில் வேகமாக வந்த கார் ஒன்று மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
லண்டனின் 'வெஸ்ட்மின்ஸ்டர்' பகுதியில் இங்கிலாந்து நாடாளுமன்றம் அமைந்துள்ளது.
இங்கிலாந்து நேரப்படி இன்று காலை 7.30 மணி அளவில் நாடாளுமன்றத்தில் வெளியே அமைக்கப்பட்டிருந்த தடுப்பு மீது பயங்கர வேகத்தில் வந்த ஒரு கார் மோதியது.
இதன் காரணமாக அந்த பகுதியில் பயங்கர சத்தம் எழுந்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முன்னதாக அந்த கார் நடந்து சென்று கொண்டிருந்த சில பொதுமக்கள் மீது மோதியதில் அவர்கள் சாலையோரமாக தூக்கி வீசப்பட்டனர். அதில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். நல்ல விஷயமாக அவர்கள் யாருக்கும் தீவிர காயம் ஏற்படவில்லை.
முதலில் இதை ஒரு சாலை விபத்தாக தான் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி இருந்தது. ஆனால் தற்போது விசாரணையானது, தீவிரவாத ஒழிப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகள் மீது கார் மோதி உள்ளதால் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த நடந்த முயற்சியாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. காரை ஓட்டிச் சென்ற நபரை பாதுகாப்பு படையினர் துப்பாக்கிமுனையில் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.