ஸ்பெயின் நாட்டில் தீவிரவாத தாக்குதல்- மக்கள் கூட்டத்தில் வேன் பாய்ந்து ஒருவர் பலி: 32 பேர் படுகாயம்
ஸ்பெயின் நாட்டில் தீவிரவாத தாக்குதலுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். 32 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் மக்கள் கூட்டத்திற்குள் வேன் ஒன்று பாய்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 32 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரின் முக்கிய சுற்றுலாத் தலம் லாஸ் ராம்பலாஸ். இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும், அந்நாட்டு மக்களும் குவிந்திருப்பது வாடிக்கை. மாலை நேரம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்ட நிலையில், திடீரென கூட்டத்திற்குள் வேன் ஒன்று புகுந்தது.
கண்மண் தெரியாமல் உள்ளே நுழைந்த வாகனம் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 32 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, லாஸ் ராம்பலாஸ் பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வண்ணம் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் இந்த இடத்திற்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல்தான் என்று போலீசார் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.